
ஃபேக்ரதால்ஸ்ஃப்யாட்ல் நகரம் ரேக்யூவீக்-ல் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது
பெயரில் ஐஸ் கொண்ட நாட்டின் தலைநகருக்கு அருகே தீப்பிழம்பு சீறிப்பாய்கிறது.
ஆம். ஐஸ்லாந்துதான் அந்த நாடு. இந்நாட்டின் தலைநகர் பெயர் ரேக்யூவீக்.
இந்நகரில் இருந்து தென்மேற்கே சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் ஒரு எரிமலை வெடித்துள்ளது என்கிறது அந்நாட்டு வானிலை ஆய்வு அலுவலகம்.
ரேக்யூவீக் தீபகற்பத்தில் உள்ள இந்த ஃபேக்ரதால்ஸ்ஃப்யாட்ல் (Fagradalsfjall) எரிமலை வாயின் பிளவு 500 முதல் 700 மீட்டர் நீளமுள்ளது என்றும் அந்த அலுவலகம் தெரிவித்துள்ளது. 800 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது இந்த எரிமலை வெடிக்கிறது.
இது தவிர, ஐஸ்லாந்தில் கடந்த மூன்று வாரங்களில் 40 ஆயிரம் நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.
Nýtt myndskeið af eldgosinu í Geldingardal, tekið úr þyrlu Landhelgisgæslunnar. #Eldgos #Reykjanes pic.twitter.com/GAVzPKYxnT
— Icelandic Meteorological Office – IMO (@Vedurstofan) March 19, 2021
2010-ம் ஆண்டு இந்நாட்டில் உள்ள ஏயுஃப்யாட்யோகுட் (Eyjafjallajokull) எரிமலை வெடித்தபோது, ஐரோப்பா முழுவதும் விமானப் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
ஆனால் தற்போது வெடித்துள்ள ஃபேக்ரதால்ஸ்ஃப்யாட்ல் எரிமலை சாம்பலையும், புகையையும் அவ்வளவாக உமிழாது என்றும் அதனால் விமானப் போக்குவரத்து பாதிக்கப்படாது என்றும் நம்பப்படுகிறது.

கிரீன்விச் சராசரி நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு 8.45-க்கு இந்த எரிமலை வெடித்ததாகவும், வெப்காம், செயற்கைக்கோள் படங்கள் மூலமாக பிறகு இது உறுதி செய்யப்பட்டதாகவும் வானிலை ஆய்வு அலுவலகம் தெரிவிக்கிறது.
கடலோரக் காவல் படை ஹெலிகாப்டர் ஒன்று இந்தப் பகுதியை ஆய்வு செய்து, எரிமலை வெடித்து லாவா (எரிமலைக் குழம்பு) வழியும் காட்சியைப் படம் பிடித்து அனுப்பியது.
#Volcano active in Iceland at the moment. Stay away from the area of the eruption for the first time being. #fagradalsfjall #reykjanes #eldgos pic.twitter.com/od66ZC7KI6
— Joint Cyclone Center (@JointCyclone) March 20, 2021
சிவப்பு நிறத்தில் தகிக்கும் வானம்
“சிவப்பு நிறத்தில் தகித்துக்கொண்டிருக்கும் வானத்தை என் வீட்டின் சாளரத்தில் இருந்து பார்க்க முடிகிறது. இங்கிருக்கும் எல்லோரும் தங்கள் காரில் அங்கே சென்று பார்க்க போய்க்கொண்டிருக்கிறார்கள்” என்று ராய்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தார் ரான்வெய்க் குட்முண்ட்ஸ்டோடி என்பவர்.
இவர் எரிமலையில் இருந்து 8 கி.மீ. தொலைவில் கிரிண்டாவிக் என்ற இடத்தில் வசிக்கிறார்.
எரிமலை வெடிப்பதற்குப் பல மணி நேரம் முன்பாக அந்த எரிமலையில் இருந்து 1.2 கி.மீ. தொலைவில், 3.1 அளவுள்ள நிலநடுக்கம் ஏற்பட்டது
