செவ்வாய்க்கிழமை, மே 19
Shadow

37 ஆண்டுகால சர்வாதிகார ஆட்சி முடிவு: ஜிம்பாப்வே அதிபர் முகாபே ராஜினாமா

 

ஜிம்பாப்வே அதிபர் முகாபே ராஜினாமா செய்ததையடுத்து அவரது 37 ஆண்டுகால சர்வாதிகார ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.

ஜிம்பாப்வேக்கு 1980-ல் சுதந்திரம் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து 1980-ம் ஆண்டில் ஜிம்பாப்வே ஆப்பிரிக்க தேசிய கூட்டமைப்பு (இசட்.ஏ.என்.யு) கட்சியை ராபர்ட் முகாபே தொடங்கினார். கடந்த 1987-ல் ஜிம்பாப்வே ஆப்பிரிக்க மக்கள் கூட்டமைப்பு (இசட்.ஏ.பி.யு) கட்சி முகாபே கட்சியுடன் இணைந்தது.

சுமார் 37 ஆண்டுகள் ஜிம்பாப்வே நாட்டை ஆண்ட முகாபே, துணை அதிபர் எம்மர்சனை அண்மையில் பதவி நீக்கம் செய்துவிட்டு தனது மனைவி கிரேஸை (52) அடுத்த அதிபராக்க முயற்சி செய்தார். இதற்கு ராணுவ தளபதி கான்ஸ்டன்டினோ சிவெங்கா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். கடந்த 15-ம் தேதி ஆட்சி, அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியது. 93 வயதாகும் அதிபர் முகாபே வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.

ஜிம்பாப்வே நாட்டில் வறுமை, வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வரும் நிலையில் முகாபே பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஆளும் ஜனு பி.எப். கட்சித் தலைவர்களே போர்க்கொடி உயர்த்தினர்.

தொடர்ந்து முகாபேவுக்கு எதிராக எதிர்ப்புக் குரல் அதிகரிக்க, தனது அதிபர் பதவியை முகாபே ராஜினாமா செய்துள்ளார்.

மேலும் இந்த ராஜினாமாவை “வலுக்கட்டாயத்தினால் செய்யவில்லை” என்று முகாபே கூறியுள்ளார்.

முகாபேயின் ராஜினாமா குறித்து எதிர்க்கட்சித் தலைவர் மோர்கன் திஸ்வான்கிராய் கூறும்போது, “ஜிம்பாப்வே புதிய பாதையில் உள்ளது. இனி ஜிம்பாப்வே நியாயமான தேர்தல்களை உள்ளடக்கி இருக்கும். முகாபே தனது இறுதி நாட்களில் இனி ஒய்வெடுக்கலாம்” என்று கூறியுள்ளார்.

முகாபே ராஜினாமா செய்ததையடுத்து. ஜிம்பாப்வே மக்கள் தெருக்களில் கூடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

343 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன