
மதுரை கீழடியில் நடந்து வரும் ஏழாம் கட்ட அகழாய்வின்போது மூடியுடன் கூடிய மண்பானை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 13ஆம் தேதியில் இருந்து கீழடியில் ஏழாம் கட்ட அகழாய்வுப் பணிகள் இடம்பெற்று வருகின்றன. இதுவரை ஐந்து குழிகள் தோண்டப்பட்டுள்ளதாகவும் இருவண்ணப் பானைகள், பானை ஓடுகள், பகடை, கல்லால் ஆன உழவுக் கருவி உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், மூன்றாவதாகத் தோண்டப்பட்ட குழியில் இருந்து ஒன்றரை அடி உயரத்திலான மண்பானை கிடைத்துள்ளது. இப்பானை உடையாமல், மூடியுடன் இருப்பது ஆய்வாளர்களிடம் வியப்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

இதுவரை சேதமடைந்த நிலையிலேயே பானைகள் கிடைத்து வந்த நிலையில், முழுவதும் மூடப்பட்ட நிலையில் இந்தப் பானை கிடைத்துள்ளது.
இறுக்கமாக மூடப்பட்டுள்ள நிலையில் பானை கிடைத்துள்ளதால் அதனுள்ளே வேறு பொருள்கள் இருக்கக்கூடும் எனத் தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.
