கொடநாடு வழக்கு மறுவிசாரணை- தற்கொலை செய்து கொண்ட கணினி ஊழியரின் தந்தையிடம் விசாரணை!
கொடநாட்டில் நடந்த கொலை, கொள்ளை வழக்கில் பல்வேறு மர்மங்கள் இருப்பதால் அந்த வழக்கை நீலகிரி போலீசார் மீண்டும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்காக அமைக்கப்பட்டுள்ள கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான 5 தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
முக்கிய குற்றவாளியான சயான், சாட்சிகள் மற்றும் கொடநாடு மேலாளர் என 40-க்கும் மேற்பட்டவர்களிடம் போலீசார் மறுவிசாரணை நடத்தி அவற்றை வாக்குமூலமாக பதிவு செய்துள்ளனர்.
அதன்படி கோத்தகிரி தாசில்தாரை சந்தித்த தனிப்படை போலீசார் தினேஷ்குமார் மரணம் தொடர்பாக மீண்டும் விசாரணை மேற்கொள்வது தொடர்பாக மனு ஒன்றை அளித்தனர். அதற்கு உடனடியாக அனுமதி அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து தினேஷ்குமார் வழக்கை நேற்றே போலீசார் விசாரிக்க தொடங்கினர். தினேஷ்குமாரின் சொந்த ஊரான கோத்தகிரி அருகே கெங்கரைக்கு நேற்று மாலை டி.எஸ்.பி. தலைமையிலான தனிப்படை போலீசார் 5 பேர் சென்றனர். அவர்கள் கெங்கரையில் வசிக்கும் தினேஷ்குமாரின் தந்தை போஜனை தனியாக அழைத்து விசாரித்தனர்.
தினேஷ்குமார் எப்படி இறந்தார், அவரது மரணத்தில் என்னென்ன சந்தேகங்கள் உள்ளன, நெருக்கடி காரணமாக அவர் தற்கொலை முடிவை எடுத்தாரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பினர். சுமார் 2 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது பல முக்கிய தகவல்களை போஜன் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அந்த தகவல்களை போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்தனர்.
போஜனை தொடர்ந்து அவரது உறவினர்கள் சிலரிடமும், அவருடன் பணியாற்றிய எஸ்டேட் ஊழியர்களிடமும் போலீசார் விசாரிக்க உள்ளனர். விசாரணைக்கு பின் தினேஷ்குமாரின் தற்கொலை வழக்கு சந்தேக மரண வழக்காக மாற்றப்படும் என தெரிகிறது. தேவைப்பட்டால் தினேஷ்குமாரின் உடலை மீண்டும் மறுபிரேத பரிசோதனை நடத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.