
வடிவேலுவின் ”கிணத்த காணோம்” பாணியில் போலீசுக்கு வந்த புகார்!
மதுரையின் கூடல்புதூர் நகரில் ரூ.28 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட வோடபோன் செல்போன் டவர் கடந்த இரண்டு நாட்களாக காணவில்லை என போலீசில் புகாரளித்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
‘கண்ணும் கண்ணும்’ படத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலு தனது நிலத்தில் தோண்டிய கிணத்தை காணும் என்று போலீசில் புகார் அளிப்பார். இதுபோன்ற ஒரு சம்பவம் தான் மதுரை நகரின் ஒரு பகுதியில் நிகழ்ந்துள்ளது.
ஆனால் இங்கு காணாமல் போனது கிணறு இல்லை, பல லட்சம் மதிப்பிலான பிரபல நிறுவனத்தின் செல்போன் டவர்.
மதுரை மாவட்டத்தில் உள்ள கூடல்புதூரின் அமராவதி தெரு பகுதியில், பிரபல தொலைத்தொடர்பு நிறுவனமான Vodafone நிறுவனத்தின் சார்பில் செல்போன் டவர் ஒன்று ரூ.28 லட்சம் செலவில் அமைக்கப்பட்டது.
கடந்த இரு தினங்களாக இப்பகுதி மக்களுக்கு சரியாக சிக்னல் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தனர்.
பின்னர் இந்த சிக்னல் பிரச்சனை குறித்து குறிப்பிட்ட நிறுவனத்திற்கு அப்பகுதி மக்கள் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர். இவ்வாறு தொடர்ந்து எழுந்த புகாரால் அந்நிறுவனம் அப்பகுதியில் அமைக்கப்பட்ட செல்போன் டவர் குறித்து ஆய்வு செய்தது.
அப்போது தான் அங்கு வைக்கப்பட்டிருந்த செல்போன் டவர் மாயமாகி இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அந்நிறுவனத்தின் மேலாளர் முத்து வெங்கடகிருஷ்ணன் இதுகுறித்து காவல்நிலையத்தில் புகாரளித்தார்.
