பட்ஜெட் கூட்டத்தொடர் – பாராளுமன்ற முதல் அமர்வு இன்று கூடுகிறது!
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்ட கூட்டத்தொடர் இன்று தொடங்கி பிப்ரவரி 11-ம் தேதி வரை நடைபெறும். அடுத்தகட்ட கூட்டத்தொடர் மார்ச் 14-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்நிலையில், பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு இன்று கூடுகிறது.
முதல் நாள் பாராளுமன்ற இரு சபைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்உரையாற்றுகிறார்.
அப்போது அவர் கடந்த ஆண்டு மத்திய அரசு அமல்படுத்திய நலத் திட்டங்கள், வளர்ச்சிப் பணிகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் பற்றிய விவரங்களை அறிவிப்பார்.
பாராளுமன்றத்தில் 2022- 2023ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நாளை தாக்கல் செய்வார்.
இந்த பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் மற்றும் வரிச்சலுகைகள் அதிகளவில் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வருமானவரி சலுகை, பொருளாதார வளர்ச்சிக்கான சலுகையும் மத்திய பட்ஜெட்டில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்க்கட்சித் தலைவர்களின் தொலைபேசி உரையாடலை ஒட்டுக் கேட்டதாக எழுந்துள்ள பெகாசஸ் விவகாரம், பாராளுமன்றத்தில் புயலைக் கிளப்பும் என தெரிகிறது.
கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் நீடிப்பதால் பாராளுமன்றம் முழுவதும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
400 Views

