
காந்தி நினைவுநாளில் கோவையில், உறுதிமொழி ஏற்கும் நிகழ்வின்போது அங்கு வந்த காவல்துறையினர் அதனைத் தடுத்துள்ளனர் என்று கூறியுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்,
இது அதிகார வரம்புமீறல் என்றும், காவல்துறையில் கோட்சே வாரிசுகள் என்றும் குறிப்பிட்டு, இது குறித்து அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், காந்தி நினைவு நாளையொட்டி கோவையில் ‘மக்கள் ஒற்றுமை மேடை’ என்னும்அமைப்பின் ஒருங்கிணைப்பில் சனாதன பயங்கரவாதத்திற்கு எதிராக உறுதிமொழி ஏற்றுள்ளனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான தோழர் ஜி.இராமகிருஷ்ணன் அவர்கள் சொல்லச் சொல்ல மற்றவர்கள் திரும்பச் சொல்லி உறுதிமொழி ஏற்கும் நிகழ்வின்போது திடுமென காவல்துறையினர் அங்கே வந்து அதனைத் தடுத்துள்ளனர்.
காந்தியைக் கொன்றது கோட்சே என்றும் ஆர்எஸ்எஸ் பயங்கரவாதிகள், இந்து மதவெறியர்கள் என்றும் கூறக் கூடாதென அப்பகுதியைச் சார்ந்த காவல் துணைக் கண்காணிப்பாளரும் வேறு சில காவல் அதிகாரிகளும் தடுத்து வாக்குவாதம் செய்துள்ளனர். இந்த நிகழ்வு மிகுந்த வியப்பையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது.
காவல் துறையினர் அவ்வாறு நடந்துகொண்டது ஏனென்று விளங்கவில்லை. காந்தியடிகளைச் சுட்டுக் கொன்ற மதவெறி பயங்கரவாதி நாதுராம் கோட்சே தான் என்பதும், அவன் அதற்காக மரணத் தண்டணைக்குள்ளானான் என்பதும் வரலாற்று உண்மை.
இந்த வரலாறு அறியாதவரா அந்த காவல் அதிகாரி? ஏன் கோட்சே பெயரைச் சொல்லக்கூடாது என தடுத்தார்? காந்தியடிகளைக் கோட்சே கொல்லவில்லை என்று நம்புகிறாரா? அல்லது காந்தியடிகள் கொல்லப்படவே இல்லை; வேறு காரணங்களால் இறந்தார் என கருதுகிறாரா?
கோவை – அதிகார வரம்புமீறல்:
காவல்துறையில் கோட்சே வாரிசுகள்!
அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!#காவல்துறையில்_கோட்சே_வாரிசுகள்#காந்தி #Gandhi #Coimbatore #கோவை @CMOTamilnadu pic.twitter.com/idTBeWigki— Thol. Thirumavalavan (@thirumaofficial) January 31, 2022
அல்லது அவர் காந்தியைக் கொன்றது சரி என்று கோட்சேவைக் கொண்டாடும் கும்பலான சனாதனச் சங்கிகளுள் ஒருவரா? அவரும் அவரோடு வந்த அதிகாரிகளும் நடந்துகொண்ட போக்குகள் மற்றும் அணுகுமுறைகள் வன்மையான கண்டனத்துக்குரியது.
சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கிறோம் என்னும் பெயரில் மதம் சார்ந்து செயல்படும் காவல்துறையினரின் இந்தப்போக்குக் கருத்துரிமையைப் பறிக்கும் சனநாயக விரோத அடாவடிப் போக்கு மட்டுமின்றி, மதவாத நடவடிக்கையுமாகும்.
எனவே, மதசார்பின்மைக்கெதிராகச் செயல்பட்டுள்ள காவல் அதிகாரியின் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டுமென விசிக சார்பில் வலியுறுத்துகிறோம் இவ்வாறு கூறியுள்ளார்.
