
குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்குப் பிறகு பிறந்த பெண் குழந்தைக்கு, பட்டப்படிப்பு முடிக்கும் வரை ஆண்டுக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழியைச் சேர்ந்த தனம், ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், இரண்டாவதும் பெண் குழந்தை பிறந்ததது.
இதனால் 2014ம் ஆண்டு ஆசாரிப்பள்ளத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
இந்நிலையில் தனம் மீண்டும் கர்ப்பம் தரித்தார். அவரை பரிசோதித்த அரசு மருத்துவ கல்லூரி மருத்துவர்கள், குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை தோல்வியடைந்துவிட்டதாக அறிக்கை கொடுத்தனர்.
இதனால், தனக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரி, தனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் விசாரணைக்கு வந்த போது, சில நேரங்களில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை தோல்வியடைவும் வாய்ப்புள்ளது எனவும்,
இந்த விஷயம் அறுவை சிகிச்சைக்கு முன்பே மனுதாரருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதால் இழப்பீடு கோர முடியாது என்றும் அரசுத்தரப்பில் வாதிடப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி, குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்குப் பின் மீண்டும் கர்ப்பம் தரிக்காது என முழுமையாக நம்பிய நிலையில், மீண்டும் கருவுற்ற மனுதாரருக்கு இழப்பீடு பெற உரிமை உள்ளதாக கூறி,
மூன்றாவது பெண் குழந்தைக்கு 21 வயது வரையிலோ அல்லது பட்டப்படிப்பு வரையிலோ கல்வி கட்டணம், பாடபுத்தகங்கள், எழுதுபொருட்கள் ஆகியவற்றுக்காக மாதம் 10 ஆயிரம் ரூபாய் வீதம் ஆண்டுக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை வழங்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும், மனுதாரரின் 3-வது குழந்தையையும் பெண் குழந்தைகளுக்கான திட்டத்தில் அரசு சேர்க்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
