
ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை விலைக்கு வாங்க ஏதுவாக தமிழக அரசு செலுத்திய 68 கோடி ரூபாய் டெபாசிட் தொகையை திரும்ப பெறுவதாகவும்,
கையகப்படுத்தும் நடவடிக்கையை கைவிடுவதாகவும் தமிழக அரசு சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியின்போது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதற்கு ஏதுவாக சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் தமிழக அரசு 68 கோடி ரூபாய் டெபாசிட் செய்தது.
24 ஆயிரத்து 322 சதுர அடி பரப்பளவு கொண்ட வேதா இல்லத்திற்கு இழப்பீட்டுத் தொகையைத் தமிழக அரசு செலுத்தியுள்ளது.
ஜெயலலிதா செலுத்தாமல் இருந்த வருமான வரி பாக்கி ரூ.36.9 கோடியும் செலுத்தப்பட்டுள்ளது. மனுக்களை விசாரித்த நீதிபதி, அரசின் இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று தீபா, தீபக் மற்றும் வருமான வரித்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது
இந்த நிலையில், வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதை எதிர்த்து சட்டபூர்வ வாரிசுகளான தீபக் மற்றும் தீபா ஆகியோர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி சேஷசாயி கையகப்படுத்தும் முந்தைய அதிமுக அரசு பிறப்பித்த உத்தரவுகளை ரத்து செய்து கடந்த நவம்பர் 24ம் தேதி தீர்ப்பளித்தார்.
இந்த நிலையில சென்னை ஆறாவது கூடுதல் சிவில் நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் சென்னை வருவாய் கோட்டாட்சியர் சார்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில் வேதா இல்லத்தை விலைக்கு வாங்க ஏதுவாக டெபாசிட் செய்யப்பட்ட 68 கோடி ரூபாய் தொகையை திரும்ப பெறுவதாகவும், கையகப்படுத்தும் நடவடிக்கையை கைவிடுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மனுவை விசாரித்த நீதிமன்றம், வருமானவரித்துறையின் சார்பில் சில விளக்கம் தேவைப்படுவதால் வழக்கில் வரும் 18 ம் தேதி உத்தரவு பிறப்பிக்க உள்ளதாக தெரிவித்தது
