
மயிலாடுதுறையில் பாரம்பரிய அடையாளமாக 50 ஆண்டுகளாக வலம்வரும் மாயூரநாதர் கோயில் யானைக்கு கொட்டகையில் வனவிலங்கு ஆர்வலர் ஏற்பாட்டில் மின்விசிறி வசதி வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அபயாம்பாள் யானை மகிழ்ச்சியில் திளைக்கின்றது.
மயிலாடுதுறையில் பழைமையும், பிரசித்தியும் வாய்ந்த திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான மாயூரநாதர் கோயில் உள்ளது.
இக்கோயிலில் 60 வயதுடைய அபயாம்பாள் என்கிற யானை கடந்த 50 ஆண்டுகளாக பராமரிக்கப்பட்டு வருகிறது.
விழாக்காலங்களில் உற்சவ மூர்த்தி புறப்பாட்டின்போது சுவாமிக்கு முன்னர் யானை அபயாம்பாள் சென்றால் தான் விழா களைகட்டும்.
50 ஆண்டுகளாக இவ்வூர் மக்களின் செல்லப்பிள்ளையாகவே கொண்டாடப்பட்டு வருகிறார் யானை அபயாம்பாள்.
2 ஆண்டுகளுக்கு முன்னர் யானை ஆர்வலர் ஒருவர் இந்த யானைக்கு கோடைக்காலத்தில் ஷவர் வசதி ஏற்படுத்தித் தந்தார்.
கடந்த வருடம் செல்வந்தர் ஒருவர் யானைக்கு வெள்ளிக்கொலுசு அணிவித்து அழகு பார்த்தார்.
இந்நிலையில், மயிலாடுதுறையில் கடந்த ஒரு வாரமாக கோடை வெம்மையின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகிறது.
வெயிலின் தாக்கத்தால் மனிதர்கள் படும் அவதியோடு, யானையின் அவதியையும் சிந்தித்த வனவிலங்கு ஆர்வலர் நட்சத்திரா குழுமத் தலைவர் ஆடிட்டர் குரு.சம்பத்குமார் என்பவர் மயிலாடுதுறை யானை கொட்டகையில் இரண்டு மின்விசிறி அமைத்துத் தந்துள்ளார்.
50 ஆண்டுகளாக இல்லாத வகையில் கொட்டகையில் காற்று வீசுவதால் யானை அபயாம்பாள் ஈக்களின் தொந்தரவு நீங்கி, கோடையின் தாக்கம் குறைந்து குதூகலமடைந்து, அடிக்கடி உற்சாகமாக பிளிறி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறது.
