
உக்ரைனுக்கு எதிரான போரை ரஷ்யா தீவிரப்படுத்தி வரும் நிலையில் அந்நாட்டிற்கு எதிரான கூட்டணியில் இந்தியா இல்லை என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விமர்சித்துள்ளார்.
அவரது கருத்து சர்வதேச அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
அணிசேராக் கொள்கையை கடைபிடித்து வரும் இந்தியா, உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுடன் நல்லுறவை தொடர்ந்து பேணி வருகிறது.
உக்ரைனை ரஷ்யா கடுமையாக தாக்கி வரும் நிலையில் ரஷ்யாவுக்கு எதிராக ஐநா சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
அப்போது, வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை.
குவாட் அமைப்பில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் உள்ளன.
இவற்றில் இந்தியாவை தவிர்த்து மற்ற நாடுகள் அனைத்தும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தியுள்ளன
இவற்றை சுட்டிக் காட்டி அமெரிக்காவில் வணிக தலைவர்களிடையே உரையாற்றிய அதிபர் ஜோ பைடன், ‘குவாட் அமைப்பில் இடம்பெற்றிருக்கும் நாடுகளில் ரஷ்யாவை எதிர்ப்பதில் இந்தியா சற்று நடுக்கம் காண்கிறது.
ரஷ்யாவை ஜப்பானும், ஆஸ்திரேலியாவும் வலுவாக எதிர்க்கின்றன. ரஷ்யாவுக்கு எதிரான கூட்டணியில் இந்தியா இடம்பெறவில்லை.’ என்று கூறினார்.
