
பாஜக கூட்டணி வேட்பாளர் முர்மு சென்னை வந்தால் பிளவுபட்ட அதிமுகவில் யாரை சந்திப்பார்?
குடியரசு தலைவர் தேர்தல் வருகிற ஜூலை 18 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அப்பதவிக்காக ஆளும் பாஜக கூட்டணி சார்பில் பழங்குடியின பெண் திரெளபதி முர்முவும், எதிர்க்கட்சியின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிடுகின்றனர். தேர்தல் நெருங்குவதால், கூட்டணி கட்சிகளிடம் ஆதரவு கோர போட்டியாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக களமிறங்கிய யஷ்வந்த் சின்ஹா பல்வேறு மாநிலக் கட்சிகளின் ஆதரவைப் பெறுவதிலும் தீவிரம் காட்டி வருகின்றனர். அதன்படி திமுக, காங்கிரஸ், விசிக, மதிமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு கோரி சென்னைக்கு பயணம் மேற்கொண்டார். இந்த நிலையில், இன்று சென்னை வந்தடைந்த அவர், அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார். அவரை பூங்கொத்து கொடுத்து முதலமைச்சர் ஸ்டாலின் பிரம்மாண்டமாக வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர்.

பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் திரெளபதி முர்மு, கூட்டணி கட்சிகளிடம் ஆதரவு திரட்டுவதற்காக சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்
அதன்படி நாளை மறுநாள் சென்னைக்கு வருகை தர இருக்கும் திரெளபதி முர்மு, அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சித்தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரவுள்ளார். ஆனால் அதிமுகவில் தற்போது ஒற்றைதலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்து வருகிறது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் ஒற்றை தலைமை பிரச்சனையில் இருதுருவமாக நிற்கின்றனர். இப்படி பட்ட சூழ்நிலையில் சென்னைக்கு வருகை புரியும் திரெளபதி முர்மு இங்கு அதிமுகவில் யாரை சந்திப்பார். யாரிடம் ஆதரவு கோருவார் என்பது கேள்விகுறியாக உள்ளது.
