வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19
Shadow

நாஞ்சில் சம்பத், சரஸ்வதி அ.தி.மு.க.வில் இருந்து நீக்கம்: வெற்றிவேல் உள்பட நால்வரின் பதவி பறிப்பு

ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் தோல்வி அடைந்ததை அடுத்து, அ.தி.மு.க.வின் உயர் மட்டக்குழுவின் அவசர கூட்டம் இன்று காலை 11 மணியளவில் கூடியது. கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் தேர்தல் தோல்வி குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

இதனையடுத்து, டி.டி.வி தினகரன் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் மற்றும் கட்சியின் பல்வேறு பொறுப்புகளில் உள்ளவர்களை நீக்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தினகரன் பக்கம் உள்ள மாவட்ட செயலாளர்களான வெற்றிவேல், கலைராஜன், தங்க தமிழ்ச்செல்வன், முத்தையா, ரங்கசாமி, பார்த்திபன் ஆகியோரின் கட்சி பதவிகள் பறிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டன.

இந்நிலையில், அ.தி.மு.க தலைமை கழகத்தில் இருந்து செய்திக்குறிப்பு வெளியாகியுள்ளது. அதில், கட்சியின் குறிக்கோளுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதால், மாவட்ட செயலாளர்கள் வி.பி.கலைராஜன், பாப்புலர் முத்தையா, புகழேந்தி (கர்நாடக மாநில செயலாளர்), நாஞ்சில் சம்பத், சி.ஆர் சரஸ்வதி ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றொரு அறிக்கையில், மாவட்ட செயலாளர்களான வெற்றிவேல், பார்த்திபன், ரெங்கசாமி, தங்க தமிழ்செல்வன் ஆகியோர் தாங்கள் வகித்து வந்த பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், இவர்கள் கட்சியை விட்டு நீக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

248 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன