
முந்தய படங்களால் ஆபாச இயக்குனர் என்று பெயரெடுத்து கேவலப்பட்ட சந்தோஷ் பி ஜெயக்குமார் அட பரவாயிலையே என சொல்லும் அளவுக்கு கொடுத்த படம்தான் பொய்க்கால் குதிரை.
நடன புயல் பிரபுதேவாவை ஒற்றைக்காலில் நடிப்பு புயலாக மாற்றிய வித்தைக்கு இயக்குனரின் முந்தய ஆபாச அர்ச்சனைகளை மறந்து மன்னிக்கலாம்.
கதைப்படி, ”விபத்து ஒன்றில் தனது மனைவியையும், ஒரு காலையும் இழக்கிறார் பிரபு தேவா.
பின்னர் தனது மகள் தான் உலகம் என்று வாழ்க்கையை நகர்த்த, அவரது மகள் உடல் நிலை பாதிக்கப்படுகிறது. மகளை காப்பாற்ற தேவைப்படும் பணத்திற்காக தவறான பாதைக்கு போக பிரபு தேவா முடிவு செய்கிறார். ஆனால், அப்போது நடக்கும் சில எதிர்பாராத சம்பவங்கள், அவரை வேறு ஒரு பாதையில் பயணிக்க வைக்க, இறுதியில் அவர் தனது மகளை காப்பாற்றினாரா இல்லையா? என்பதை பல திருப்பங்களுடன் சொல்வது தான் ‘பொய்க்கால் குதிரை’ பட கதை.
ஏற்கனவே நடன புயலாக இருக்கும் பிரபு தேவா இந்த படத்தில் ஒற்றைக்காலுடன் நடிப்பு புயலாக மாறியிருக்கிறார். ஒரு காலில் நடனம் ஆடுவது, சண்டைப்போடுவது, நடப்பது என அனைத்து காட்சியிலும் கவனமாக செயல்பட்டு சபாஷ் வாங்குகிறார் பிரபு தேவா,
கதா நாயகி ரைசா வில்சனுக்கு பெருசா வேலை எதுவும் இல்லை. கதையும் அவர் மீது டிராவல் ஆகாததால அவருக்கு சொல்ல ஒன்றுமில்லை.
ஏற்கனவே முரட்டு பீசான வரலட்சுமி சரத்குமாரின் உருவமும் நடிப்பும் அவரது கேரக்டருக்கு பலம் சேர்ப்பதால் வரலட்சுமி ஸ்கோர் வாங்குகிறார். வரலட்சுமி இனி இதுபோன்ற கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்தால் ஒரு ரவுண்டு நிலைக்கலாம்.
ஜான் கொக்கேன், காமெடி நடிகர் ஜெகன், சிறுமி ஆரியா ஆகியோரின் நடிப்பு சிறப்பு. ஒரு காட்சியில் மட்டும் வரும் ஷாம் மீண்டும் நமக்கு தான் இருப்பதை நினைவு படுத்தி செல்கிறார்.
ஒற்றை காலுடன் இருக்கும் பிரபு தேவாவை ஒளிப்பதிவாளர் பள்ளு காட்டிய விதம் ஆச்சரியம் தான். பிரபுதேவாவின் ஒற்றைக்கால் கிராபிக்ஸா அல்லது காலை மடித்து நடித்தாரா, என்பது தெரியாதவாறு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது பாராட்டுக்குறியது. மெனெக்கெட்ட பிரபுதேவாவுக்கு கண்டிப்பாக கவுரவங்கள், விருதுகள் தந்தாலும் தகும்.
டி.இமானின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பல வகையில் பலம் சேர்த்திருக்கிறது.
மொத்தத்தில் பொய்க்கால் குதிரை வசூல் கொட்ட வேண்டிய ரேஸ்குதிரை!
- கோடங்கி
- மதிப்பீடு 4/5
