
ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியில் முதல் முறையாக 2 மூடியுடன் கூடிய முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உலோகங்களை பிரித்து கூறும் கருவியுடன் ஆய்வாளர்கள் ஆய்வுப்பணியில் தீவிரம்
தூத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியம் அமைக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த 2020ம் ஆண்டு அறிவித்திருந்தார்.
அதன் முதல் கட்டமாக மத்திய தொல்லியல் துறை சார்பில், திருச்சி மத்திய தொல்லியல் மண்டல இயக்குனர் அருண் ராஜ் தலைமையில் அகழாய்வு பணிகள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் தொடங்கப்பட்டது.
இந்த அகழாய்வு பணியில் கிடைக்கும் பொருட்கள் அனைத்தும் இங்கேயே காட்சிப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த அகழாய்வு பணிகள், ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் மூன்று இடங்களில் நடந்து வருகிறது.
இந்த அகழாய்வு பணியில் 80க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டது. இது தவிர சங்க கால வாழ்விடப்பகுதிகளும் கண்டுபிடிக்கப்பட்டது.
கடந்த 4 தினங்களுக்கு முன்பு நடந்த அகழாய்வு பணியில், 117 ஆண்டுகளுக்கு பின்னர் 3.5 சென்டி மீட்டர் நீளம் கொண்ட தங்கத்தால் ஆன நெற்றிப்பட்டயம் கண்டுபிடிக்கப்பட்டது.
அதே குழியில் 9 அம்புகள், 1 வாள், 1 ஈட்டி, 1 சூலம், தொங்கவிட்டான் உள்பட 20 பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் ஆய்வாளர்கள் உற்சாகமடைந்தனர்.
இந்நிலையில், இந்த அகழாய்வு பணியில் முதல் முறையாக 2 மூடிகள் கொண்ட முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியில் இதுவே முதல் முறை.
