நடிகர் ரஜினிகாந்த் தமிழகம் முழுவதும் உள்ள ரசிகர்களை கடந்த 26ந்தேதியில் இருந்து சந்தித்து வருகிறார். அவர்களுடன் புகைப்படமும் எடுத்து வருகிறார். இந்த நிலையில், சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் நடிகர் ரஜினிகாந்த் இன்று 4வது நாளாக ரசிகர்களை சந்திக்கிறார். கோவை, திருப்பூர், ஈரோடு, வேலூர் மாவட்ட ரசிகர்களுடன் இந்த சந்திப்பு நடக்கிறது.

அவர் ரசிகர்கள் மத்தியில் பேசும்பொழுது, 31ந்தேதிக்கு இன்னும் 2 நாட்களே இருக்கின்றன என கூறினார். இதனை தொடர்ந்து ரசிகர்கள் கூட்டத்தில் இருந்து ஆரவாரம் எழுந்தது. தொடர்ந்து அவர், என் நண்பர்கள் அதிகம் வாழும் ஊர் கோவை. என் குருநாதர் சச்சிதானந்த் கோவை மேட்டுப்பாளையத்தில் பிறந்தவர்.
பெயர், புகழால் மரியாதை கிடைக்கும். ஆனால் நாம் எப்படி வாழ்கிறோம் என்பதை வைத்தே மக்கள் நம்மை மதித்திடுவார்கள்.
காலம்தான் மிக முக்கியம். காலம் வரும்பொழுது அனைத்தும் தன்னாலே மாறும். சினிமா ஆனாலும், அரசியல் ஆனாலும் காலம் மிக முக்கியம். காலம் வந்தால் எல்லாம் தன்னாலே மாறும்.
கோவையில் ரசிகர்களின் ஆதரவை பார்த்து விட்டு இது உன் காலம் என சிவாஜி என்னை வாழ்த்தினார் என கூறினார். அதன்பின்னர் அவர் ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்து வருகிறார்.
