திங்கட்கிழமை, ஏப்ரல் 28
Shadow

முதலில் சூர்யா அடுத்து ரஜினி கடைசியில் விக்ரம் மூலமாக உருவான “துருவ நட்சத்திரம்” – மனம் திறந்த இயக்குனர் கவுதம்வாசுதேவமேனன்!

 

கெளதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘துருவ நட்சத்திரம்’.இந்தப்படத்தில், ரிது வர்மா, பார்த்திபன், சிம்ரன், மாயா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார்.பல்வேறு சிக்கல்களைத் தாண்டி இம்மாதம் 24 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இப்படம், இஸ்தான்புல், சார்ஜா, துருக்கி, அமெரிக்கா, பல்கேரியா, ஜார்ஜியா, ருமேனியா, அபுதாபி போன்ற நாடுகளில் பெரும் பொருட்செலவில் படமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் படம் பற்றி இயக்குநர் கெளதம்மேனன் பல விசயங்களைப் பகிர்ந்து கொண்டார்.

அவை…

இந்தக் கதையில் முதலில் சூர்யா நடிப்பதாக இருந்தது.அது நடக்கவில்லை என்றதும் ரஜினி சாரிடம் இந்தக் கதையைச் சொன்னேன் அப்போது எமோஷனல் காட்சிகளை நீக்கிவிட்டுச் சொன்னேன்.ஸ்டைலிஷான ஆக்‌ஷன் படமாக இருக்கும் என்று சொன்னேன். அவருக்கும் கதை பிடித்திருந்தது. ஆனால், சில காரணங்களால் அவருடன் இணைந்து பண்ண முடியவில்லை.

அதன்பிறகு விக்ரம் உள்ளே வந்தார், சூர்யாவுக்காக நான் பண்ண கதைக்கும், இதற்கும் இருக்கும் வித்தியாசம் அதில் ஒரு உணர்வுப்பூர்வமான பிளாஷ்பேக் இருந்தது. அது இதில் இருக்காது, விக்ரம் சார் உள்ளே வந்ததால் அதை எடுத்துவிட்டேன்.

விக்ரம் சாரிடம் சொன்னபோதும் பிளாஷ்பேக் இல்லாமல் சொன்னேன். அவர் சரி என்றார், அவர் கேட்ட ஒரே விசயம், உங்கள் படத்தில் வில்லன் கதாபாத்திரம் பலம் வாய்ந்ததாக இருக்கும், இதிலும் அப்படித்தானா? எனக்கேட்டார்.

வில்லன் பலமானவன் என்றால் அவனை வீழ்த்தும் ஹீரோ அவனைவிடப் பலமானவர் என்றேன். உடனே சம்மதம் சொன்னார்.

கதை கேட்ட பிறகு, உங்களுக்கு இந்த வேடம் இது இப்படித் தான் இருக்க வேண்டும் என்று சொன்னேன். அதற்கு எந்த அளவுக்கு நடிக்க வேண்டுமோ அதை மட்டும் தான் விக்ரம் சார் செய்தார்.

கூடுதலாக இதை இப்படி வைக்கலாம், எனக்கு இது வேண்டும் என்று எதையுமே அவர் சொல்லவில்லை.

விக்ரம் சார் ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றுபவர். இது தான் அவருக்கான அடையாளம். ஆனால், அவருக்கு வேறு ஒரு உலகம் இருக்கிறது அது யாருக்கும் தெரியாது.இது ஒரு ஸ்பை த்ரில்லர் படம். ரொம்ப டெக்னிக்கலாக அதற்குள் நான் போகவில்லை.

நாட்டுக்கு ஒரு பிரச்னை வருகிறது அந்த பிரச்னைக்காக ஒரு குழுவினர் எப்படிப் பணியாற்றுகிறார்கள்? அவர்களுக்கு ஒரு பிரச்னை வருகிறது, அதை அவர்கள் எப்படிக் கையாளுகிறார்கள்? என்பனவற்றைத்தான் சொல்லியிருக்கிறேன்.

இந்தக் குழுவினர், இந்தியாவுக்கு எதிரான பிரச்னைகளை கையாள்வதற்காக உலகம் முழுவதும் பயணப்படும் குழுவாக இருப்பார்கள்.

இந்தக்குழு, மும்பை தாக்குதல் சம்பவத்திற்குப் பிறகு உருவாக்கப்பட்ட ஒரு குழு என்பது போல் தான் வைத்திருக்கிறேன். 15 வருடங்களுக்குப் பிறகு நடக்கும் சம்பவம் என்பதால் இவர்கள் யார்? எப்படி உருவானார்கள் என்பதைச் சொல்லியிருக்கிறேன்.

அந்தக் குழுவை உருவாக்குபவர் அரசுப் பதவியில் இருப்பவர், ஆனால் அவர் எந்தப் பதவியில் இருப்பவர் என்பதை இப்போது சொல்ல முடியாது. அந்தக் கதாபாத்திரத்தில் பிரபல நடனக் கலைஞர் பத்மஸ்ரீ விருது வென்ற தனஞ்செயன் நடித்திருக்கிறார்.

முதலில் அமிதாப்பச்சனைத் தான் அந்த வேடத்தில் நடிக்க வைக்க முயன்றோம், ஆனால் வெளிநாட்டுப் பயணங்கள் இருப்பதால் அவர் நடிக்க மறுத்துவிட்டார். அப்போது தான் தனஞ்செயன் சாரை பார்த்தேன், அவர் சரியாக இருப்பார் என்று தோன்றியது நடிக்க வைத்துவிட்டோம்.

வில்லனாக நடித்த விநாயகனும் எனக்கு மிகப்பெரிய உதவியாக இருந்தார். அவருடைய நடிப்பை விக்ரம் சார் பாராட்டினார்.

ஆக்‌ஷன் பிரியர்களுக்கு மட்டுமின்றி அனைவருக்கும் பிடித்தமான படமாக இருக்கும். ஸ்டைலிஷான ஆக்‌ஷன் கமர்ஷியல் படம்.

அதை நான் ரியலாக எடுத்திருக்கிறேன். பிரமாண்டமான சண்டைக்காட்சிகளை இரசிகர்கள் ஏற்கனவே பார்த்துவிட்டார்கள். அதனால் அதை நான் திரும்பச் செய்ய முயலவில்லை.

டிரைலரில் கிரிக்கெட் தொடர்பான வசனங்கள் இடம்பெற்றிருப்பதால் கிரிக்கெட் தொடர்பான விசயங்கள் படத்தில் இருக்கிறதா? என்று கேட்கிறார்கள்.படத்தில் கிரிக்கெட் பற்றிய விசயங்கள் எதுவும் இல்லை.

ஒரு குழு பற்றிய படம், உயர் பதவியில் இருக்கும் ஒருவர் இந்தக் குழுவை ஒருங்கிணைக்கிறார். இதில் 11 பேர் இருப்பதால், ஒரு கிரிக்கெட் அணியோடு ஒப்பிட்டு உருவாக்கிய டிரைலர் அது. படத்திலும் அந்த வசனங்கள் இடம் பெறும். ஆனால் கதையில் கிரிக்கெட் பற்றி எதுவும் இல்லை.

ஜேம்ஸ்பாண்ட் படங்கள் போல் இது தொடர்ச்சியான பாகங்களைக் கொண்ட படமாக இருக்கும்.துருவநட்சத்திரம் அதன் தொடக்கம், இந்தப் படத்தின் முடிவில் ஒரு ட்விஸ்ட் இருக்கும். அதைத் தொடர்ந்து அடுத்த பாகம் வரும். அதில் வேறு ஒரு வில்லன் வருவார். வேறு ஒரு ஹீரோ கூட வருவார்.

176 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன