
ஆட்சி கவிழும் என டிடிவி தினகரன் கனவு காண்கிறார் என்று துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். டிடிவி தினகரன் ஆர்கே நகர் தொகுதி சட்டசபை உறுப்பினராக இன்று பதவியேற்றார்.
இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அ.தி.மு.க.வில் ரத்தமும் சதையுமாக உள்ள தொண்டர்கள் எங்கள் பக்கம் தான் உள்ளனர் என்று அவர் கூறினார். சசிகலா தலைமையிலான அ.தி.மு.க.வே உண்மையான இயக்கம் என ஆர்.கே நகர் மக்கள் தீர்ப்பு வழங்கி விட்டனர் என்றும் தினகரன் தெரிவித்தார்.

துரோக வரலாற்றில் துரோகத்திற்கு இடமில்லை என்றும் கூறினார். மனதளவில் பல அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் எங்கள் பக்கமே உள்ளனர் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார். சிலர் வழிவிட்டால் கட்சியை தக்கவைக்கலாம் என்றும் அவர் கூறினார். கடந்த சில நாட்களாகவே டிடிவி தினகரன் இந்த ஆட்சி விரைவில் கவிழும் வீட்டுக்கு அனுப்பப்படும் என கூறி வருகிறார்.

இந்நிலையில் சென்னை தலைமைச்செயலகத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் டிடிவி தினகரன் கூறி வருவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஆட்சி கலையும் என டிடிவி தினகரன் கனவு காண்பதாக கூறினார். அவரது கனவுக்கெல்லாம் தான் பதில சொல்ல முடியாது என்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
