
கருணாநிதி என்னை அடையாளம் கண்டு பெயரைச்சொல்லி அழைத்தது உணர்ச்சிப்பூர்வமான சந்திப்பு – வைகோ
கருணாநிதியை கோபலபுரத்தில் சென்று சந்தித்த வைகோ உணர்ச்சிகரமான சந்திப்பு என்று கூறினார். தன்னை அடையாளம் கண்டு பெயரைச்சொல்லி அழைத்தது உணர்ச்சிப்பூர்வமான சந்திப்பு என்றார்.
திமுக செயல் தலைவர் ஸ்டாலினை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இரவு 7 மணி அளவில் அவரது இல்லத்தில் சந்தித்தார். அவரோடு தனியாக ஆலோசனை நடத்திய வைகோ அவரது காரிலேயே அவருடன் கோபாலபுரம் இல்லத்திற்குச் சென்றார்.
இரவு 8 மணி அளவில் கருணாநிதியை வைகோ சென்று பார்த்தார். அப்போது, யார் என்று தெரிகிறதா? என்று ஸ்டாலின் கருணாநிதியிடம் கேட்டவுடன், புன்னகை பூத்தவாறு வைகோ என கருணாநிதி உணர்த்தினார்.
சந்தித்துவிட்டு வெளியே வந்தபின் நிருபர்களிடம், “அரசியலில் என்னை வளர்த்து ஆளாக்கிய, இமைப்பொழுதும் நெஞ்சில் நீங்காது என்னை இயக்கிய அண்ணன் கருணாநிதி அவர்களைப் பார்த்தேன். நலமாக இருக்கிறார்.
திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு பக்கபலமாக, உறுதுணையாக செயல்படுவது என்று எங்கள் இயக்கம் ஒருமனதாக முடிவு செய்தது என்று நான் கூறினேன்.
கருணாநிதியின் கரத்தைப் பற்றிக்கொண்டேன். மனதை நெகிழச் செய்கின்ற உணர்ச்சி மயமான சந்திப்பாக எனக்கு அமைந்தது” என்று வைகோ கூறினார்.
