
வதந்தி வாட்ஸ்-அப்பில் வந்தது, சிரித்துவிட்டேன் – பி.வாசு கிண்டல்
பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடிக் கொண்டிருக்கும் போது நேற்று (ஜனவரி 15) மாலை இயக்குநர் பி.வாசு குறித்து பல்வேறு வதந்திகள் சமூகவலைத்தளத்தில் வெளியாயின. இதனால் தமிழ் திரையுலகில் பரபரப்பு நிலவியது. சில நிமிடங்களிலேயே அவர் நலமுடன் இருக்கிறார், வதந்திகளை கிளப்பாதீர்கள் என்று பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், தன்னைப் பற்றிய வதந்திக்கு பி.வாசு வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:
என் மீது அன்பு வைத்திருக்கும் அத்தனை உள்ளங்களுக்கும் என் வணக்கம். என்னைப் பற்றிய வதந்தியை நானே கேள்விப்பட்டேன். எனக்கே அப்படி வாட்ஸ்-அப்பில் வந்தது. சிரித்துவிட்டேன்.
இன்று தான் உடற்பயிற்சி கூடத்தில் 6 கி.மீ நடந்துவிட்டு வந்தவுடன் தான் இச்செய்தியே வந்தது. எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. சிரிப்பு வருகிறது. எத்தனை பேர் என்னிடம் பேசினார்கள் என நினைக்கும்போது சந்தோஷமாக இருக்கிறது. அனைவருக்கும் நன்றி.
நன்றாக இருக்கிறேன். ரொம்ப நன்றாகவே இருக்கிறேன். இந்தாண்டு 3 படங்கள் இயக்கப் போகிறேன். அனைவருக்கும் மீண்டும் என் நன்றி.
இதுபோல பிரபலங்கள் குறித்து வதந்திகள் அவ்வப்போது வந்து கொண்டே இருக்கிறது. சமூக வலைதளங்களில் எந்த கருத்தையும் எழுதலாம் என்ற நிலையிருப்பதால் இந்த நிலை. ஒரு தகவல் வெளியானால் உடனடியாக சம்பந்தப்பட்டவரையோ அவர் குடும்பத்தாரையோ தொடர்பு கொண்டு விசாரித்தபிறகுதான் அது போன்ற தகவல்களின் உண்மைதன்மையை அறிந்து கொள்வது நல்ல்து.
