
மைகேல் ராயப்பன் – சிம்பு பிரச்சனையில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? – விஷால் விளக்கம்
காலீஸ் இயக்கத்தில் நடிகர் ஜீவா – நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகி இருக்கும் கீ படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடந்தது.
இதில் இயக்குநர் காலீஸ், ஜீவா, நிக்கி கல்ராணி உள்ளிட்ட கீ படக்குழுவினரும், விஷால், விஜய் சேதுபதி, மைக்கேல் ராயப்பன், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட தயாரிப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் பேசும் போது, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படம் குறித்து மைக்கேல் ராயப்பன் கொடுத்த வழக்கு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கேட்டார். இதனால் இசை வெளியீட்டு விழாவில் சலசலப்பு ஏற்பட்டது.
இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய விஷால், முதலில் கீ படத்தின் பாடல்களும், டிரைலரும் சிறப்பாக வந்திருப்பதாக கூறி, படத்தில் ஜீவா, இயக்குநர் காலிஸ் உள்ளிட்ட படக்குழுவுக்கு பாராட்டுக்களை தெரிவித்தார். பின்னர் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் அளித்த புகாரின் அடிப்படையில், நாங்கள் நடவடிக்கை எடுத்தோம். ஆனால் சிம்பு தரப்பில் இருந்து எந்த பதிலும் வரவில்லை. எனவே இந்த பிரச்சனையை எப்படி முடிப்பது என்பதே தெரியவில்லை. அதனால் தான் இந்த பிரச்சனையில் காலதாமதம் ஆகிறது என்றார்.
மைக்கேல் ராயப்பனின் நிலையை அறிந்து தான், எனது இரும்புத்திரை படத்தின் ரிலீஸ் தேதியை பிப்ரவரி 9-ல் இருந்து மீண்டும் தள்ளிவைக்க முடிவு செய்துள்ளோம். மேலும் மைக்கலே் ராயப்பன் தயாரிப்பில், ஒரு பைசா அட்வான்ஸ் பணம் வாங்காமல் நடிக்க தான் தயாராக இருக்கிறேன். அந்த படம் வெற்றி பெறும் பட்சத்தில், அவர் எனக்கு சம்பளம் கொடுத்தால் போதும் என்றும் விஷால் தெரிவித்தார்.
தயாரிப்பாளர்களை மிரட்டும் கியூப் பிரச்சனையில் வரும் ஏப்ரல் மாதத்திற்குள் நல்ல முடிவு வரும் என்றார் விஷால்.
