சனிக்கிழமை, மே 30
Shadow

காயத்ரி எனக்கு ரொம்பவே ஸ்பெஷல்: விஜய் சேதுபதி

7சி எண்டர்டெயின்மெண்ட் ஆறுமுககுமார் மற்றும் அம்மே நாராயணா என்டர்டைன்மென்ட் சார்பில் கணேஷ் காளிமுத்து, ரமேஷ் காளிமுத்து தயாரிப்பில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ள படம் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’. படத்தின் தயாரிப்பாளரான ஆறுமுக குமார் எழுதி இயக்கி இருக்கும் இந்த படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். கிளாப் போர்டு புரொடக்‌ஷன்ஸ் சத்தியமூர்த்தி வெளியிட, வரும் பிப்ரவரி 2ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
இதில் விஜய் சேதுபதி பேசும்போது, ‘ஒரு தெளிந்த நீரோடை போல மிகவும் தெளிவானவர் தான் இயக்குனர் ஆறுமுக குமார். ஆள் பார்த்து பழகாமல், எல்லோரையும் சமமாக நினைத்து பழகக் கூடியவர். அவர் முதல் படத்திலேயே தயாரித்து இயக்கியிருக்கிறார். தன் திறமை மேல் நம்பிக்கை வைத்து உழைக்கும் ஹீரோ தான் கௌதம் கார்த்திக். எந்த ஈகோவும் இல்லாத, நன்கு முதிர்ந்த அனுபவம் கொண்டவர். அவரை இந்த படத்தில் பரிந்துரைத்ததற்கு பெருமைப்படுகிறேன். காயத்ரி எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். இந்த வருடம் அவருக்கு மிக சிறந்த வருடமாக இருக்கும்’ என்றார்.
கௌதம் கார்த்திக் பேசும்போது, ‘இந்த படத்தில் ஹரிஷ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். ரொம்பவே எனக்கு நெருக்கமான கதாபாத்திரம். என்னுடைய ரியல் லைஃபிலும் நான் அப்படி தான். இந்த படத்தின் கதையை கேட்ட விஜய் சேதுபதி என்னை பரிந்துரைத்தது எனக்கு பெருமை. அவர் எப்போதுமே சினிமாவையே நினைத்துக் கொண்டிருப்பவர். அவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன். சினிமாவிலும், வாழ்க்கையிலும் எனக்கு நண்பனாக பயணித்து வருபவன் டேனி தான். கேமராமேன் ஸ்ரீசரவணன் ரொம்ப ரிஸ்க் எடுத்து ஒளிப்பதிவு செய்யக் கூடியவர். படத்துக்காக என்ன வேணாலும் செய்ய துணிந்தவர். இந்த படத்துக்காக புதுமையான இசையை கொடுத்திருக்கிறார் ஜஸ்டின் பிரபாகரன். இயக்குனர் ஆறுமுக குமாருக்கு இது முதல் படம் தான் என்றாலும் தனக்கு என்ன வேண்டுமோ அதை கேட்டு வாங்கி, சிறப்பான படத்தை கொடுத்திருக்கிறார்’ என்றார்.
காயத்ரி பேசும்போது, ‘இந்த படத்தில் கோதாவரினு ஒரு கதாபாத்திரம் இருக்கு, நடிக்கிறீங்களானு கேட்டாங்க. ஆறுமுக குமார் தயாரிப்பாளராக, இயக்குனராக இருந்தும் கொஞ்சம் கூட பதட்டமே இல்லாமல் ரொம்பவே கூலாக இருந்தார். இந்த குழுவில் இருந்த எல்லோருடனும் ஏற்கனவே அறிமுகம் இருந்ததால் நல்ல ஒரு அனுபவமாக அமைந்தது. தலக்கோணம் காட்டில் மொத்த குழுவுடன் பழக நிறைய வாய்ப்பு கிடைத்தது’ என்றார்.
370 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன