
ஷராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கை விசாரித்த நீதிபதி லோயா மரணமடைந்ததில், சிறப்பு விசாரணை வேண்டும் என ராகுல் காந்தி தலைமையில் எம்.பி.க்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா குஜராத் மாநில உள்துறை மந்திரியாக இருந்தபோது போலி என்கவுண்டர் புகார் எழுந்தது. இவ்வழக்கை மும்பை சி.பி.ஐ நீதிபதி லோயா விசாரித்து வந்த நிலையில், அவர் திடீரென மாரடைப்பால் மரணமடைந்தார். இதன் பின்னர், அவ்வழக்கை வேறு நீதிபதி விசாரித்து அமித்ஷாவை வழக்கில் இருந்து விடுதலை செய்தார்.
தற்போது, நீதிபதி லோயா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பல்வேறு தரப்பில் இருந்து புகார் எழுந்தது. அவர் மரணத்தில் உள்ள சந்தேகத்தை விசாரிக்க உத்தரவிட வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு, தற்போது அந்த வழக்கு விசாரணையில் உள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் கபில் சிபில், குலாம் நபி ஆசாத், டி ராஜா உள்ளிட்ட பல எம்.பி.க்கள் இன்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்தனர். அப்போது, நீதிபதி லோயா மரணம் தொடர்பாக சிறப்பு விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என 15 கட்சிகளைச் சேர்ந்த 114 எம்.பி.க்கள் கையெழுத்திட்ட கோரிக்கை மனுவை அளித்தனர்.
இதனையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி கூறியதாவது:-
இரு அவைகளைச் சேர்ந்த பல எம்.பி.க்கள் லோயா மரணம் தொடர்பான விவகாரத்தில் அசவுகரியத்தை அடைந்துள்ளோம். ஒரு நீதிபதி மர்மாக மரணமடைவது சாதாரணமான விஷயம் அல்ல. எனவே, இதில் சுதந்திரமான சிறப்பு விசாரணைக்குழு அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம்.
