
‘கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார்?’ என்ற கேள்விக்கு முன்பிருந்தே, தமிழகத்தில் பதில் தேடப்பட்டுக்கொண்டிருப்பது ‘இந்த ஆர்யாவுக்கு எப்ப பாஸ் கல்யாணம்?’ என்ற கேள்விக்குத்தான். சிலர் ஆர்யா செய்யும் சேட்டைகளால், அதனால் ஏற்படும் பொறாமையால் இந்தக் கேள்வியை முன்வைத்தாலும் ஒருகட்டத்தில் அவரது நலனுக்காகச் சொல்வது போன்றே இந்தக் கேள்வி பரிணமித்துவிட்டது. அதனால் இதற்குப் பதில் தேடும் முயற்சியாக ஆர்யாவுடன், தமிழகத்தில் களமிறங்கியிருக்கிறது ‘கலர்ஸ் தமிழ்’(Colors Tamil) சேனல்.

சில வாரங்களுக்கு முன்பு, நடிகர் ஆர்யா தனது ட்விட்டர் அக்கவுன்ட்டில் ‘என்னைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறவர்கள் இந்த நம்பருக்கு போன் செய்யுங்கள்’ என்று வீடியோ ஒன்றைப் பதிவு செய்திருந்தார். அந்த எண்ணுக்கு உலகம் முழுவதிலுமிருந்து எழுபதாயிரம் பெண்கள் போன் செய்திருக்கிறார்கள். அப்படிக் கிடைத்த பெண்களின் எண்ணுக்கு, அடுத்தகட்டமாக அவர்களது பெயரை இணையதளத்தில் பதிவு செய்யுமாறு கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது.

இதில்,8 ஆயிரம் பெண்கள் அவர்களது முழு தகவல்களையும் பதிவு செய்திருக்கின்றனர். அவர்களில், 650 பெண்களை கலர்ஸ் தமிழ் சேனலின் பணியாளர்கள் தேர்வு செய்துகொடுக்க, அதிலிருந்து ‘இப்படிப்பட்ட பெண் இருந்தால் நன்றாக இருக்குமே!’ என 18 பெண்களை ஆர்யா தேர்வு செய்திருக்கிறார்.
அந்த 18 பெண்களையும் ஒவ்வொருவராக அழைத்து, அவர்களுடன் தன்னைப் பற்றிப் பகிர்ந்துகொள்வதும், அவர்களைப் பற்றித் தெரிந்துகொள்வதுமாக ‘திருமணத்துக்கான நேர்முகத் தேர்வு’ நடத்துகிறார் ஆர்யா. இந்தக் காட்சிகளை தமிழகத்தில் பிப்ரவரி 20 முதல் ஒளிபரப்பைத் தொடங்கும் கலர்ஸ் தமிழ் சேனல் ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ என்ற நிகழ்ச்சியின்மூலம் ஒளிபரப்புகிறது.
