18 வயதுக்குட்பட்ட சிறுவர்களை வாகனம் ஓட்ட அனுமதிக்கும் பெற்றோர்கள் மற்றும் வாகன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் சாலை விபத்துகள் அதிகளவில் நடைபெறுகின்றன. இது தவிர, சிறுவர்கள் வாகனம் ஓட்டுவதாலும் பெரும்பாலான விபத்துக்கள் ஏற்படுகின்றன. சிறுவர்கள் வாகனம் ஓட்டுவது மட்டுமில்லாமல், பந்தயத்திலும் ஈடுபடுகின்றனர். இதனால் அவர்களுக்கு மட்டுமின்றி, பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்துகின்றனர்.
இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கொண்டுவரும் வகையில் சென்னை காவல் துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், ஓட்டுநர் உரிமம் இல்லாத, 18 வயதுக்கு குறைவான சிறார்களுக்கு வாகனம் ஓட்ட அனுமதி தரும் பெற்றோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வாகனத்தை ஓட்ட அனுமதிக்கும் வாகன உரிமையாளர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை சாலைகளில் சிறார்கள் தங்களது பெற்றோரின் வாகனத்தை ஓட்டுவதுடன் பந்தயத்திலும் ஈடுபடுகின்றனர். சிறார்கள் வாகனம் ஓட்ட அனுமதித்தால் ரூ. 1,000 அபராதம் அல்லது 3 மாத சிறை தண்டனை விதிக்கப்படும்.
2017ஆம் ஆண்டின் ஜனவரி முதல் அக்டோபர் வரை சாலை விபத்தில் 14,077 பேர் உயிரிழந்துள்ளனர்.
