குருத்தோலை ஞாயிறு தினத்தையொட்டி தமிழகத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாடு ஜெபக்கூட்டங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.
கிறிஸ்து உயிர்ப்புப் பெருவிழா நடைபெறும் ஞாயிற்றுக்கிழமைக்கு (Easter Sunday)முந்தைய ஞாயிற்றுக் கிழமைதான் உலகெங்கும் உள்ள குருத்தோலை ஞாயிறு கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அனைத்துத் தேவலங்களிலும் திருப்பலிக்கு முன்னதாகக் குருவானவரால் புனித நீரால் மந்திரிக்கப்பட்ட குருத்தோலைகளைக் கிறிஸ்தவர்கள் கையிலேந்தி தேவாலம் அருகிலுள்ள வீதிகளில் வழியே ஊர்வலமாகச் சென்று பின் ஆலயத்திற்குள் நுழைவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். தென்னை, பனை, பேரீச்சை மரக்குருத்தோலையோ, ஒலிவமரக் கிளைகளோ கிடைக்காத நாடுகளில் லில்லி உள்ளிட்ட மலர்களையும் நீண்டு வளர்ந்த பூற்களையும் கையேந்திச் செல்கிறார்கள். ஐரோப்பாவில் வில்லோ எனப்படும் புற்களை ஏந்திச்செல்வதால் அங்கே அது ‘வில்லோ சண்டே’ என்றே அழைக்கப்படுகிறது. இயேசுவுக்கு சொந்த ஊர் மக்கள் வழங்கிய வரவேற்பை நினைவுகூரும் விதமாக யூத கிறிஸ்தவர்களால் முதலில் கொண்டாடப்பட்டு வந்த இந்த குருத்தோலை நிகழ்வு நாளடைவில் எகிப்து, சிரியா என்று பரவி, பிறகு கிறிஸ்தவர்களின் முக்கிய நினைவேந்தல் ஆனது
அதாவது இயேசு கிறிஸ்து சிலுவையில் பாடுபட்டு மரித்த காலத்தை உலகமுழுவதிலும் உள்ள கிறிஸ்தவர்கள் தவக்காலமாக கடைபிடித்து வருகின்றனர். கிறிஸ்தவர்களின் தவக்காலம் கடந்த மாதம் பிப்ரவரி 14 ம் தேதி சாம்பல் புதன் அன்று தொடங்கியது. இந்த 40 நாட்கள் தவக்காலத்தில் கிறிஸ்தவர்கள் ஜெபம், தவம், தானம் செய்து இறைவனின் அருளையும், ஆசியையும் வேண்டுகின்றனர். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர்நீத்தநாள் புனித வெள்ளி என்றும், மூன்றாம்நாள் உயிர்த்துழுந்த தினம் ஈஸ்டர் உயிர்ப்பு ஞாயிறு என்றும் அழைக்கப் படுகிறது. ஈஸ்டர் பண்டிகைக்கு முதல் ஞாயிறு குருத்தோலை ஞாயிறாக உலகம் முழுவதிலும் உள்ள கிறிஸ்தவர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு இறப்பதற்கு முன்பாக ஜெருசலம் நகரின் வீதிகளின் வழியாக அவரை ஒரு கழுதை குட்டியின் மேல் அமர்த்தி ஊர்வலமாக அழைத்து வந்தனர். அப்போது வழி நெடுகிலும் மக்கள் குருத்தோலைகளை கையில் பிடித்து ஓசன்னா பாடல்களை பாடினர். இந்த நிகழ்ச்சியை நினைவு கூறும் வகையில் கிறிஸ்வதர்கள் குருத்தோலை திருநாளை நடத்தினர். இந்த நிகழ்ச்சி ஆண்டு தோறும் ஞாயிற்று கிழமை வருவதால் குருத்தோலை ஞாயிறு என அழைக்கப்படுகிறது. அதன் படி, தமிழகமெங்கும் குருத்தோலை ஞாயிறு சிறப்பு ஜெபக்கூட்டங்கள் இன்று நடைபெற்றன. பல்லாயிரக்கணக்கான ஆண், பெண், குழந்தைகள் இந்த ஜெபக்கூட்டங்களில் பங்கேற்று, மனமுருகி வழிபாடு செய்தனர்.
நாகை மாவட்டம் புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் இன்று காலை ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் இயேசுவின் பாடுகளையும்,சிலுவை மரணத்தின் உயிர்ப்பையும் நினைவு கூறும் வகையில் கைகளில் குருத்தோலைகளை ஏந்தியவாறு ஓசன்னா பாடலை பாடியவாறு பவனியாக வந்தனர்.
பேராலய முகப்பிலிருந்து துவங்கிய பவனியானது ஊர்வலமாக வந்து பேராலய கீழ்கோவிலை வந்தடைந்தது. பின்னர் அங்கு பேராலய அதிபர் பிரபாகர் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. வரும் வெள்ளிக்கிழமை புனித வெள்ளியாகவும், ஞாயிறு ஈஸ்டர் ஞாயிறாகவும் கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றனர்.
.
