காவிரி விவகாரத்தில் இறுதித் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், தமிழகத்திற்கான தண்ணீரின் அளவைக் குறைத்தது. அதே நேரத்தில் காவிரி நீரை பங்கிட்டுக் கொள்வது தொடர்பாக முடிவு செய்ய காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து இதுவரை மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது தமிழக மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் வரும் மே மாதம் 12 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மத்திய அரசு நிறைவேற்றுமா என சந்தேகம் எழுந்துள்ளது.
இதனிடையே தமிழக எம்.பிக்கள் ராஜினாமா செய்ய வேண்டும் கோரிக்கை வலுத்து வருகிறது. இந்நிலையில் நேற்று மாநிலங்களவையில் பேசிய அதிமுக எம்.பி நவநீதிகிருஷ்ணன், தமிழகத்தில் எங்களை ராஜினாமா செய்யுமாறு கூறுவதாகவும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தற்கொலை செய்வோம் எனவும் ஆவேசமாக பேசினார். உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தவில்லை என்றால் எதற்கு அரசியலமைப்பு சட்டம் எனவும் கேள்வி எழுப்பினார்.
இதற்கு அரசியல் கட்சிகள் மத்தியிலும் ஆளுங்கட்சிகாரர்கள் மத்தியிலும் பல்வேறு கருத்துக்கள் உலாவின. இந்நிலையில், அரசியல் விளையாட்டுக்காக தற்கொலை செய்து கொள்வேன் என கூறுவது பித்தலாட்டம் எனவும் ராஜினாமா செய்வேன் என கூறும் எம்.பிக்கள் ராஜினாமா செய்தால் பாராட்டுக்களை தெரிவிப்பேன் எனவும் மக்கள் நீதி மய்யத்தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் பேசுகையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் யார் பெயர் சொல்லி தற்போதைய தமிழக அரசு செயல்பட்டு வருகிறதோ அவரது பெயருக்கே களங்கம் ஏற்பட்டுவிடும். மேலாண்மை வாரியம் தொடர்பாக முதல்வரை சந்திக்க இன்று நேரம் கேட்டுள்ளோம்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலம் தாழ்த்தி வருவது ஓட்டு வேட்டைக்காக நடைபெறும் விளையாட்டு. மேலாண்மை வாரியம் அமைப்பது ஒன்றும் பெரிய செயல் அல்ல. மத்திய அரசு நினைத்தால் உடனடியாக அதனை அமைக்கலாம். காவிரி விஷயத்தில் யாரும் அரசியல் செய்ய வேண்டாம். மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வோம் என அதிமுக எம்.பி.நவநீத கிருஷ்ணன் கூறி இருப்பது அரசியலுக்காக செய்த பித்தலாட்டம். காவிரி மேலாண்மை வாரியத்திற்காக எம்.பிக்கள் உண்மையாக ராஜினாமா செய்தால் அதனை நான் வரவேற்பேன் என்றார். மேலும் அவர் பேசுகையில், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்தில் ஏப்ரல் 1-ம் தேதி மக்களுடன் பங்கேற்க உள்ளதாகவும் கூறினார்.
