திங்கட்கிழமை, மே 13
Shadow

ரஜினி கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு நியமனம்

அரசியலில் குதித்துள்ள நடிகர் ரஜினிகாந்த்தின் ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகிகள் ஒவ்வொரு மாவட்டமாக நியமிக்கப்பட்டு வருகிறார்கள். சென்னைக்கு உறுப்பினர்களை வரவழைத்து அவர்களுக்கு நேர்காணல் நடத்தி நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டனர்.

இதற்கிடையே அமெரிக்காவில் இருந்து திரும்பிய ரஜினி கட்சியின் பெயரை எப்போது அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த நிலையில் ரஜினி மக்கள் மன்றத்தின் உறுப்பினர்கள், நிர்வாகிகள் தொடர்பான புகார்களை விசாரிக்க மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான அறிவிப்பை ரஜினி மக்கள் மன்றம் வெளியிட்டுள்ளது:-

ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்களின் ஒழுக்கம், கட்சி தொடர்பான புகார்களை விசாரிப்பதற்காக ஒழுங்கு நடவடிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் டாக்டர் இளவரசன், ராமதாஸ், என்.கோவிந்த ராஜ், கே.கே.துரைராஜ், பரமேஸ்வரன் பகவான், வி.எம்.கிருஷ்ணமூர்த்தி ஆகிய 6 பேர் நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இக்குழு மாதம் ஒருமுறை கூடி உறுப்பினர்கள் மீதான புகார்களை விசாரித்து தலைமை மன்றத்துக்கு பரிந்துரைகளை அளிக்கும். மேலும் இந்த குழுவுக்கு மன்ற உறுப்பினர்கள் தங்களின் குறைகளை dac@rajinimakkalmandram என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம் அல்லது ஒழுங்கு நடவடிக்கை குழு எண்.40 விஸ்வநாதபுரம் பிரதான சாலை, கோடம்பாக்கம், சென்னை என்ற முகவரிக்கு அனுப்பலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

236 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன