வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26
Shadow

ஹாரர் தாண்டி எமோஷனல் கதையுடன் ஐரா புதுசாக இருக்குமாம்!

 

கேஜேஆர் ஸ்டுடியோஸ் சார்பில் கோட்டபாடி ஜே ராஜேஷ் தயாரிக்க, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் படம் ‘ஐரா’. கலையரசன், யோகிபாபு ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடிக்க, சர்ஜூன் கே.எம் இயக்கியிருக்கிறார். கேஎஸ் சுந்தரமூர்த்தி இசையமைத்திருக்கும் இந்த படத்தை ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் வெளியிடுகிறார். மார்ச் 28ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
இது மிகவும் மகிழ்ச்சியான தருணம். இது என் கேரியரில் மிகவும் முக்கியமான ஒரு படமாக இருக்கும். சமீப காலங்களில் நான் கடந்து வரும் மிக முக்கியமான கேள்வி மெட்ராஸ் மாதிரி ஏன் படங்கள் பண்றதில்லை என்பது தான். நானும் நிறைய கதைகள் கேட்கிறேன். இந்த படம் பெயர் சொல்லும் ஒரு படமாக இருக்கும். இயக்குனர் சர்ஜூன் உடன் எச்சரிக்கை படத்தில் நடிக்க வேண்டியது, ஆனால் அது அமையவில்லை. இந்த படத்தில் சர்ஜூன் கேட்டபோது உடனடியாக ஒப்புக் கொண்டேன். இதில் ஹாரர் விஷயத்தையும் தாண்டி மிகச்சிறப்பான கதை இருக்கிறது. சர்ஜூன் கதை எல்லாம் சொல்லி முடித்த பிறகு தான் அந்த பவானி கதாபாத்திரத்திலும் நயன்தாரா தான் நடிக்கிறாங்க என சொன்னார். அது பெரிய சர்ப்ரைஸாக இருந்தது. அந்த கதாபாத்திரத்துக்காக அவர் ரொம்பவே மெனக்கெட்டார். நல்ல ஒரு பொழுதுபோக்கு படமாக வந்திருக்கிறது என்றார் நடிகர் கலையரசன்.
நிறைய பேருக்கு நிறைய கேள்விகள் இருந்தன. மேகதூதம் பாடல் அதற்கு பதிலாக இருந்திருக்கும் என நம்புகிறேன். நான் மிகவும் ரசித்து எடுத்த படம், அதுவும் கருப்பு வெள்ளையில் படம் பிடித்தது மிகவும் மகிழ்ச்சி. கேஜேஆர் ராஜேஷ் சார் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தார். நான் கேட்டதையெல்லாம் கொடுத்தார். கதை கேட்ட பிறகு எந்த விஷயத்திலும் எந்த ஒரு குறுக்கீடும் இல்லை. ஏன் இந்த செலவு, எப்படி படத்தை எடுக்கிறீங்க என எதையும் அவர் கேட்கவில்லை. படம் முடிந்த பிறகு படத்தின் ஃபர்ஸ்ட் காப்பி பார்த்தார். மிகவும் மகிழ்ச்சி என சொன்னார். படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க ப்ரமோஷனில் பட்டையை கிளப்புகிறார். மிகச்சிறப்பாக விளம்பரப்படுத்தி வருகிறார். நயன்தாரா இரண்டு கதாபாத்திரங்களையும் மிகச்சிறப்பாக செய்திருக்கிறார். மற்ற படங்களில் இரட்டை வேடம் என்றால் அதில் இரண்டுக்கும் ஒரு தொடர்பு இருக்கும். இங்கு இரண்டு கதாபாத்திரங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. நயன்தாரா இந்த படத்துக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார். இது வெறும் ஹாரர் படம் மட்டும் கிடையாது. இன்னொரு சீரியஸான, எமோஷனல் கோணமும் இருக்கிறது. அதையும் தாண்டி ஒரு பொழுதுபோக்கு படமாக இருக்கும் என்றார் இயக்குனர் சர்ஜூம் கேஎம்.
இது மிகவும் மகிழ்ச்சியான தருணம், எனக்கு இந்த வாய்ப்பை அளித்த இயக்குனர் சர்ஜுன், தயாரிப்பாளர் ராஜேஷ் ஆகியோருக்கு நன்றி என்றார் இசையமைப்பாளர் கேஎஸ் சுந்தரமூர்த்தி.
631 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன