சனிக்கிழமை, ஏப்ரல் 27
Shadow

விவசாய விளை நிலங்களில் கெயில் நிறுவனம் எரிவாயு குழாய் பதிப்புமார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி கண்டனம்

விவசாய விளை நிலங்களில் கெயில் நிறுவனம் எரிவாயு குழாய் பதிப்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

நாகை மாவட்டம், சீர்காழி வட்டம், மாதானம் பகுதியிலிருந்து தரங்கம்பாடி வட்டம் மேமாத்தூர் கிராமத்தில் விவசாயிகளுக்கு சொந்தமான விளை நிலங்களில் அவர்களின் ஒப்புதல் இல்லாமல் நெல், பருத்தி உள்ளிட்டு பயிரிடப்பட்ட வயல்களில் ராட்சத இயந்திரங்களை இறக்கி எரிவாயு குழாய் பதிக்கும் பணியில் கெயில் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் இரணியன் உள்ளிட்ட எட்டு பேர் மீது பிணையில் வெளிவர முடியாத கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் சிறையில் அடைத்துள்ளனர்.

தமிழக அரசின் இந்த ஜனநாயக விரோத நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

கொச்சியிலிருந்து மங்களூர் வரை தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 7 மாவட்டங்களின் விளை நிலங்கள் வழியாக எரிவாயு குழாய் பதிப்பதை அப்போதைய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, மாற்று வழியில் இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென்றும், பதித்த குழாய்களை அப்புறப்படுத்த வேண்டுமென்றும் உத்தரவிட்டார்.

ஆனால் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பற்றி கிஞ்சிற்றும் கவலைப்படாமலும், தனது ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள, மத்திய பாஜக அரசு தமிழகத்திற்கு தீங்கு விளைவிக்கும் அனைத்து மக்கள் விரோத திட்டங்களுக்கும் கண்ணை மூடிக் கொண்டு போலீஸ் பாதுகாப்புடன் ஆதரவு அளித்து நிறைவேற்ற துடிப்பது, தமிழக மக்களுக்கும், விவசாயிகளுக்கும் செய்யும் மிகப் பெரிய துரோகம் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது.

தமிழகத்தின் நெற்களஞ்சிம் என்ற அழைக்கப்படும் டெல்டா மாவட்டங்களின் விவசாய நிலங்களை அழித்து, தமிழகத்தை பாலைவனமாக்கும் முயற்சியில் மத்திய பாஜக அரசு ஈடுபட்டு வருகிறது. அதற்கு தமிழகத்தில் ஆளும் அதிமுக அரசு உடந்தையாக செயல்பட்டு வருவது வன்மையான கண்டனத்திற்குரியது,

எனவே கெயில் நிறுவனத்தின் எரிவாயு குழாய் பதிக்கும் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டுமென்றும்; அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ராட்சத இயந்திரங்களை உடனடியாக அப்புறப்படுத்திட வேண்டுமென்றும், சிறையிலடைக்கப்பட்டுள்ள விவசாயிகள் அனைவரையும் நிபந்தனையின்றி உடனடியாக விடுதலை செய்து, அவர்கள் மீது போடப்பட்டுள்ள பொய்வழக்குகளை திரும்பப் பெற வேண்டுமென்றும், அழிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

– கே. பாலகிருஷ்ணன்

மாநில செயலாளர்

605 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன