குமாரசாமியை கவிழ்த்து குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்கும் பாஜக !
கர்நாடகத்தில் கடந்த சில நாட்களாக நடந்து வந்த பிஜேபியின் அரசியல் சித்து விளையாட்டு ஒரு வழியாக முடிவுக்கு வந்தது.
முதல்வர் குமாரசாமியின் ஆட்சியை கவிழ்த்து ஆட்சியை பிடிக்க எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கிய பலன் உடனடி தீர்வாக அமைந்தது.
கர்நாடக சட்டப்பேரவையில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்த நிலையில் இந்த வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வி அடைந்தது. குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 வாக்குகளும், எதிராக 105 வாக்குகளும் பதிவானது.
இந்த நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் – மஜத கூட்டணி அரசு 6 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இதனால் கர்நாடக ஆளுநர் வாஜூபாய் வாலாவை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் குமாரசாமி வழங்கினார். கவர்னரும் குமாரசாமி ராஜினாமாவை ஏற்பதாக அறிவித்தார்.
மேலும் புதிய அரசு அமையும் வரை காபந்து முதல்வராக குமாரசாமி தொடர ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார்.
காபந்து முதல்வர் நிர்வாகரீதியாக எந்த முடிவுகளும் எடுக்கக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.
குமாரசாமி ஆட்சியை கவிழ்த்து விட்டு ஆட்சியை பிடிக்க திரைமறைவு குதிரை பேரம் நடத்திய பாஜக அதில் வெற்றியும் பெற்றது. மத்தியில் நிலையான இடங்களில் வென்றதும் பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலத்தில் உள்ள அரசுகளை எப்படியாவது கவிழ்த்து விட்டு அங்கே ஆட்சியை பிடிக்க பாஜக பகீரத முயற்சிகள் எடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது. அதை உறுதிப்படுத்தும் விதமாக கர்நாடகத்தில் ஆட்சி கவிழ்ந்து உள்ளது.