
இம்சை அரசன் விவகாரம் இறங்கி வந்த வடிவேலு… நஷ்டத்தை ஈடுகட்ட படம் நடிக்கிறார்..!
வடிவேல் நடித்து வெற்றிகரமாக ஓடிய இம்சை அரசன் 23-ம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தை இம்சை அரசன் 24-ம் புலிகேசி என்ற பெயரில் படமாக்கினர். சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேல் நடித்த இந்த படத்தை ஷங்கர் தயாரித்தார். சென்னையில் அரண்மனை அரங்குகள் அமைத்து சில நாட்கள் படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில் சிம்புதேவனுக்கும், வடிவேலுவுக்கும் மோதல் ஏற்பட்டது.
இதனால் படத்தில் தொடர்ந்து நடிக்க மறுத்து விலகினார் வடிவேல். அவரை சமரசப்படுத்தி மீண்டும் நடிக்க வைக்கும் முயற்சியில் நடிகர் சங்கமும், தயாரிப்பாளர் சங்கமும் ஈடுபட்டன. ஆனாலும் வடிவேல் பிடிவாதமாக மறுத்துவிட்டார். இதனால் தனக்கு ரூ.10 கோடிவரை நஷ்டம் ஏற்பட்டு உள்ளது என்று ஷங்கர் புகார் கூறினார்.
இதைத்தொடர்ந்து வடிவேல் புதிய படங்களில் நடிக்க பட அதிபர் சங்கம் தடை விதித்தது. இதனால் 2 வருடங்களாக படங்களில் வடிவேல் நடிக்காமல் இருக்கிறார். தற்போது இந்த பிரச்சினையில் சமரச தீர்வு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இரண்டு படங்களில் சம்பளம் வாங்காமல் நடித்து ஷங்கரின் நஷ்டத்தை ஈடுகட்டுவதாக வடிவேல் வாக்குறுதி அளித்துள்ளதாகவும், இதைத்தொடர்ந்து வடிவேல் மீதான தடை நீக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
அதே நேரம் 24ம் புலிகேசி படம் கைவிடப்படும் என்றும் தெரிகிறது. இந்த பிரச்சினையில் சுமூக தீர்வு எட்டப்பட்டால் மீண்டும் வடிவேலுவை திரையில் பார்க்கலாம் என்ற ரசிகர்கள் ஆசை விரைவில் பூர்த்தி ஆகலாம்.
