
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்ச்சிக்கு செக் வைத்த தயாரிப்பாளர் சங்க கமிட்டி..!
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் இப்போது தமிழக அரசின் கண்காணிப்பில் செயல்படுகிறது.
ஓய்வு பெற்ற நீதியரசர் சேகர் தலைமையில் நிர்வாக கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த கமிட்டியின் சமீபத்திய பல அதிரடி நடவடிக்கைகள் தமிழ் திரையுலகில் பலராலும் உன்னிப்பாக கவனிக்கும் செயலாக மாறி உள்ளது.
சேலம் நகர தியேட்டர் சிண்டிகேட் தொடங்கி ரேடியோவில் பாட்டு போடும் உரிமை வரைக்கும் தயாரிப்பாளர் நலன் சார்ந்து பல அதிரடிகளை செய்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக விருது விழாக்களில் பயன்படுத்தப்படும் காட்சிகளுக்கு தயாரிப்பாளர் அனுமதி பெறவேண்டும் அவர்களை அழைத்து கவுரவபடுத்த வேண்டும் எனற கோரிக்கை உடனடியாக அமலுக்கு வந்தது.
அதே போல ரேடியோவில் பாடல் ஒலிபரப்பும் போது அந்த பட தலைப்பை சொல்லும் போது தயாரிப்பாளர் பெயர், நிறுவன பெயர் கண்டிப்பாக சொல்ல வேண்டும் என்பதையும் பல ரேடியோ நிறுவனங்கள் உடனடியாக அமல் படுத்த தொடங்கியது.
இப்போது அடுத்த அதிரடியாக வரும் 10ம் தேதி அன்று இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் நேரடி இசை நிகழ்ச்சி சென்னையில் நடக்க உள்ளது.
இந்த இசை நிகழ்ச்சியில் பாடப்படும் பாடல்களை பாடுவதற்கு முன் அந்த பட தயாரிப்பாளர் பெயர், பட நிறுவன பெயரை சொல்லிவிட்டுதான் பாடல்கள் பாடப்பட வேண்டும் என தயாரிப்பாளர் சங்க கமிட்டி உறுப்பினர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் அதிரடியாக அறிவித்து ஆடியோ வெளியிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் இந்த நடைமுறை கடைபிடிக்க ஆரம்பித்தால் இனி வரும் நாட்களில் எங்கு இசை நிகழ்ச்சி நடந்தாலும் பட தயாரிப்பாளர் பெயரும், நிறுவன பெயரும் மக்களுக்கு தெரியாமல் போகாது.
தயாரிப்பாளர் சங்க கமிட்டியின் இந்த வேண்டுகோளை ஏ.ஆர்.ரஹ்மான் ஏற்று கொள்வாரா இல்லையா என்பது குறித்து இதுவரை பதில் இல்லை.
