தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி இப்போது சைரா நரசிம்ம ரெட்டி எனும் வரலாற்றுப் படத்தில் நடித்து வருகிறார்.
ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்ட மாவீரனின் கதை. மறைக்கப்பட்ட பல வரலாற்று உண்மையான சம்பவங்களை இதில் சொல்லி இருக்கிறார்களாம்.
மிகப் பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப்படத்தில் அமிதாப்பச்சன், சுதீப், விஜய் சேதுபதி, கஜபதி பாபு, நயன்தாரா, தமன்னா மற்றும் அனுஷ்கா என இந்தியாவின் முக்கிய நடிகர்கள் பலரும் நடித்துள்ளனர்.
இந்தப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என 5 மொழிகளில் தயாராகி வருகிறது. இந்தப் படத்தின் டீசர் நேற்று வெளியாகி இணையத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்தப் படத்தின் தொடக்கத்தில் இந்தக் கதையைப் பற்றிய வாய்ஸ் ஓவர் பகுதி ஒன்று இடம்பெற்றுள்ளது. அதைப் பேசுவதற்காக அந்தந்த மொழிகளின் சூப்பர் ஸ்டார்களிடம் பேசி வருகின்றனர். தெலுங்கில் பவன் கல்யாணிடமும், மலையாளத்தில் மோகன்லாலிடமும், பாலிவுட்டில் ஹிரித்திக் ரோஷனிடம் ஏற்கனவே இது சம்மந்தமாகப் பேசியுள்ளனர்.
தமிழில் குரல் கொடுக்க சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் படக்குழு பேசி இருக்கிறார்கள். ரஜினியும் சிரஞ்சீவியும் நீண்டகால நண்பர்கள் என்பதால் இதற்கு ரஜினி சம்மதம் சொல்வார் என்றே திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரஜினி இப்போது ஜெய்ப்பூரில் தர்பார் ஷூட்டிங்கில் இருக்கிறார்.