திங்கட்கிழமை, மே 13
Shadow

சசிக்குமாரின் எம்.ஜி.ஆர்.மகன் திருடப்பட்ட கதையா..? பகீர் கிளப்பும் பத்திரிகையாளர்

 

 

சசிக்குமாரின் எம்.ஜி.ஆர்.மகன் திருடப்பட்ட கதையா..? பகீர் கிளப்பும் பத்திரிகையாளர்

தமிழ் சினிமாவில ஒரு படம் ஹிட் ஆகிடுச்சின்னா வரிசையா அதே மாதிரி படம் வரும்…
இல்ல… மிருகத்த வைச்சி படம் ரிலீஸ் ஆகி பேசப்பட்டா ஆள் ஆளுக்கு ஒரு மிருகத்தை புடிச்சிகிட்டு படம் எடுக்க கிளம்பிடுவாங்க…
இடையில எப்பவாது கதை திருட்டு புகார் கிளம்பும் கிளம்புன வேகத்துலயே அடங்கி போயிடும்…

திரைக்கதை மன்னன் பாக்யராஜ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் ஆனதும் விஜய் நடிச்சி முருகதாஸ் இயக்கிய சர்க்கார் படக்கதை தன்னுடையது என்று புகார் கொடுக்க பலகட்ட போராட்டத்திற்கு பின் அதில் தீர்வு ஏற்பட்டது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதைத் தொடர்ந்து பலரும் தங்கள் கதை திருடப்பட்டதை ஆதாரத்துடன் சொல்ல… இன்றைய நிலவரப்படி சுமார் 19 கதை திருட்டு புகார்கள் எழுத்தாளர் சங்கத்தில் விசாரணையில் இருக்கிறது.

சமீபத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ஒரு படத்தின் மூலக்கதை ஒரு வார இதழில் கதையாக வந்தது. அதைத்தான் படமாக எடுத்து விட்டார்கள் என அந்த பத்திரிகையாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறார்.

கதை திருட்டு சமீபகாலமாக அதிக அளவில் அதிகரிக்க அதை ஆதரிப்பது போல அந்த திருட்டு கதையில் நடிக்கும் ஹீரோக்களும் எந்த பதிலும் சொல்லாமல் நடித்து போகிறார்கள்.

இந்த சூழலில் சசிக்குமார் நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில் எம்.ஜி.ஆர்.மகன் என்ற பெயரில் ஒரு படம் அறிவிக்கப்பட்டு படப்பிடிப்பு தொடங்கியது.

இந்த நிலையில் எம்.ஜி.ஆர். பெயரில் ஆரம்பித்த இந்த கதையும் திருட்டு கதை என பகீர் கிளப்புகிறார் பத்திரிகையாளர் தேனி கண்ணன்.

இது குறித்து அவர் முக நூல் பக்கத்தில் எழுதிய பதிவு திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.


அதன் விவரம்:

எம்.ஜி.ஆர். மகன் யாருடைய கதை ?

அன்பு நண்பர்களுக்கும் தமிழ் சினிமாவை தலைநிமிரவைத்த பெருமைமிகு படைப்பாளிகளுக்கும் வணக்கம்.

2017 ல் புதிய தலைமுறை இதழ் ஒன்பதாம் ஆண்டு நிறைவு மலர் ஒன்றை வெளியிட்ட.து. அந்த மலரில் படைப்பு ஒன்றை எழுதச்சொல்லி மரியாதைக்குரிய ஆசிரியர் திரு.உதயசூரியன் அவர்கள் . என்னை கேட்டுக்கொண்டார். நானும் இதயக்கனி என்ற பெயரில் தேனியில் எம்.ஜி.ஆர். தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்த போது நடந்ததாக ஒரு கதையை எழுதியிருந்தேன். அந்தக்கதையை படித்த கல்வி இதழின் ஆசிரியர் திரு.பெ.கருணாகரன் அவர்கள் அருமையாக இருக்கிறது கண்ணன் இதை இன்னும் விரிவு படுத்தினால் ஒரு சினிமாவுக்கான கதையாக இருக்கும்.. என்று கருத்து தெரிவித்தார். அந்த உற்சாகத்தில் அதை கதையை கொஞ்சம் மாற்றி விரிவாக எழுத ஆரம்பித்தேன். அந்தக்கதை இதுதான்.

எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர் ராஜ்கிரண் தேர்தல் வந்தால் கடவுட் வைப்பது ஏழைகளுக்கு உதவிசெய்வது என்று பரபரப்பாக இருப்பார். எம்.ஜி.ஆர். போலவே மது, சிகரெட் போன்ற பழக்கங்கள் இல்லாதவராக இருப்பார்.. ஒருமுறைதேர்தல் பிரச்சரத்துக்காக தேனிக்கு வரும் புரட்சித்தலைவர் தன்னுடைய தீவிர பக்தர் ராஜ்கிரணை பற்றி கேள்வி பட்டு, அவரை அழைத்து சந்திக்கிறார். அப்போது அவருக்கு நெல்லிக்காய் கூடையை பரிசாக்கொடுக்கிறார் ராஜ்கிரண், மிகவும் ஏழ்மை நிலையில் இருந்து கொண்டு தனக்காக ராஜ்கிரண் நிறைய செலவு செய்து விழாக்கள் நடத்துவதையும் அன்னதானம் செய்வதையும் பாராட்டுகிறார். அப்போது சென்னை வந்து தோட்டத்தில் சந்திக்குமாறு சொல்லி விட்டு செல்கிறார்.

இருக்கும் தனது தங்கையை மருத்துவ மனையில் சேர்க்க கூட பணமில்லாமலிருக்கும் ராஜ்கிரண் தலைவரை சந்தித்து உதவிகேட்க சென்னை வருகிறார். அந்தநேரத்தில் பொன்மனச்செம்மல் திடீரென்று இறந்து விடுகிறார். ராமாவரம் செல்லும் ராஜ்கிரணை அதிமுகவை சேர்ந்த நிர்வாகி அடையாளம் கண்டு தலைவர் இறந்து போவதற்கு முன்னால் ஐந்து லட்சம் கொடுத்து உங்களிடம் கொடுக்க சொன்னார் என்று கொடுக்கிறார். இதை வாங்கிய ராஜ்கிரண் கதறி அழுகிறார்.

ஊருக்கு திரும்பும் ராஜ்கிரணுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. பிரசவ வலி வந்து தங்கை ஆண் குழந்தையை பெற்று பிரசவத்திலேயே இறந்து போகிறார். இதனால் மருமகனை வளர்க்க கல்யாணம் செய்து கொள்ளாமலேயே வாழ்ந்து வருகிறார். மருமகன் சிவகார்த்திகேயன் அவருக்கு ராமச்சந்திரன் என்று பெயரிட்டு வளர்க்கிறார். ஆனால் அவரோ பொறுப்பில்லாமல் வளர்கிறார். இதனால் மனம் வெறுத்துப்போன ராஜ்கிரண் மன வருத்தத்தில் இருக்கிறார். ஒரு நாள் சிவகார்த்திகேயனை அழைத்து நீ யார் தெரியுமா எம்.ஜி.ஆர். புள்ளடா என்று அவர் சில தகவல்களை சொல்கிறார். இதைக்கேட்டு மனம் மாறும் சிவா செய்யும் ஒரு காரியம் ஊருக்கே நல்லதாக முடிகிறது. இது நான் எழுதிய கதையின் அவுட் லைன் தான். இதில் பல சம்பவங்கள் உள்ளீடாக இருக்கிறது.
கூடவே மாமா என்பதை அப்பாவாகவும் மருமகனை மகனாகவும் மாற்றலாம் என்ற சான்ஸையும் வைத்திருந்தேன்.

இந்நிலையில் சமீபத்தில் பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் படத்திற்கு எம்.ஜி.ஆர். மகன் என்று தலைப்பு வைத்திருப்பதாக தகவல் வந்தது. இது ஒரு வேளை நான் எழுதிய கதையாக இருக்குமோ என்ற எண்ணம் எனக்கு வந்திருக்கிறது. காரணம் பொன்ராம் அவர்களிடம் கதை விவாதத்தில் இருந்த என் அருமை நண்பர் . அவரது கதை சம்மந்தமாக என்னை சந்திக்க வந்தார். அப்போது அவரது கதைக்கு தீர்வுகள் சொல்லி அதை அவர் முழுமையாக்கினார். பிறகு நான் அவரிடம் சொன்ன கதைதான் நான் எழுதியிருக்கும் எம்.ஜி.ஆர். கதை. . ஒரு வேலை அவரையறியாமல் சொல்லியிருக்கலாம். ஆனால் இதை நான் பயன் படுத்திக்கொண்டு படப்பிடிப்பு முழுவதும் முடியும் வரை காத்திருந்து ரிலீஸ் நேரத்தில் இதைச் சொல்லி யாரையும் கஷ்டபடுத்த விரும்பவில்லை.
இது குறித்து நான் என் நண்பரிடம் கேட்டபோது அவர் உங்கள் கதையில் பேரனாக சொன்னீர்கள் இவர் மகன் என்று தானே சொல்லியிருக்கிறார். உங்கள் கதை வேறு. இது வேறு என்றார்.

நல்லது. என்னுடைய கவலையெல்லாம் என் ஹீரோ பச்சை சடை என்றும் பொன்ராம் ஹீரோ சிவப்பு சட்டை என்றும் சொல்லி கதைக்கு வேறு வேறு அடையாளம் கொடுத்து விடக்கூடாது என்பதுதான். அல்லது திருட்டுக்கு இப்போதெல்லாம் சிம்பிளாக சொல்லும் இன்ஸ்பிரேஷன் என்று சொல்லாமல் இருக்க வேண்டும். இதையெல்லாம் விட திரு.சசிகுமார் மீதும் திரு.பொன்ராம் மீதும் என் மண்ணின் கலைஞர்கள் என்ற வகையில் பாசத்தையும் மரியாதையையும் வைத்திருக்கிறேன். இது போன்ற செயலில் ஈடுபட மாட்டார்கள் என்று கருதுகிறேன்.
மற்றபடி உண்மையிலேயே பொன்ராம் படம் வேறு . கதையாக இருக்கும் பட்சத்தில் படம் வெற்றியடைய என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

புரட்சித்தலைவரை நம்பிக்கெட்டவர்கள் யாரும் இல்லை. நானும் அவரை நம்பிதான் என் கதையை எழுதியிருக்கிறேன்

அன்புடன்
தேனி கண்ணன்

இப்படி அவரது பதிவில் குறிப்பிட்டு இருக்கிறார் தேனி கண்ணன்.

இந்த படத்தின் இயக்குனர் பொன்ராம் இயக்கிய சமீபத்திய படங்கள் அவரை கவிழ்த்து விட்டதால் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என திருட்டு கதையை கையில் எடுத்து விட்டார் போல…

அதே போல இந்த படத்தில் நடிக்கும் சசிக்குமார் அறிமுகம் ஆன “சுப்பிரமணியபுரம்” படக்கதையும் தன்னுடைய கதை என ஒரு பத்திரிகையாளர் குற்றம்சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.

மறைந்தாலும் மக்கள் மனசில் வாழும் எம்.ஜி.ஆர் பெயரில் உருவாகும் படத்தின் கதை நிச்சயம் திருடப்பட்டிருந்தால்… நிச்சயம் கதையை உருவாக்கியவருக்கு நல்ல தீர்வு கிடைக்கும். காரணம் தான் வாழ்ந்த காலத்தில் தவறுகளை தட்டிக்கேட்டு நியாயமான தீர்வுகளை சொல்லிச் சென்றவர் எம்.ஜி.ஆர். என்பதால்…

இந்த கதை திருட்டு புகாரில் அடுத்ததாக இயக்குனர் பொன்ராம், ஹீரோ சசிக்குமார் என்ன சொல்கிறார்கள் என்பது குறித்த விரிவான பதிவு விரைவில்…

– கோடங்கி

980 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன