
கொரானா பரவலை தடுக்க நடைமுறையில் உள்ள ஊரடங்கு வரும் மே 3ம் தேதி முடிவுக்கு வருகிறது. அதே நேரம் கொரானா பரவலின் வேகம் குறையவில்லை.
இந்த சூழலில் 3ம் தேதிக்கு பின் ஊரடங்கை தளர்த்துவதா என்பது குறித்து சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் மருத்துவ குழுவினர் இன்று ஆலோசனை நடத்தினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவ நிபுணர் குழுவின் பிரதீப் கவுர் கூறியதாவது:-
தமிழகத்தில் நடைமுறையில் உள்ள ஊரடங்கை முழுமையாக தளர்த்த இப்போதைக்கு வாய்ப்பில்லை; படிப்படியாகத்தான் தளர்த்த முடியும். அதற்கான ஆலோசனை வழங்கியுள்ளோம்.
கொரோனா வைரஸ் உடனடியாக கட்டுக்குள் வராது. கொரோனா தொற்று நீண்ட நாட்களாக நம்முடன் இருக்கும் என்பதால் நமது வாழ்க்கை முறையே மாற்ற வேண்டும். பொது இடங்களில் அதிக கூட்டம் கூடுவதை அனுமதிக்கக் கூடாது. தனிமனித இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும். முகக் கவசம் அணிவது கட்டாயம்.
புற்றுநோய், சிறுநீரகம் பாதிப்பு, சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்கள் முறையாக சிகிச்சையை கடைப்பிடிக்க வேண்டும். கடந்த வாரத்தில் பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் பாதிப்பு விகிதமும் அதிகரித்துள்ளது.
