கொரானா விவகாரத்தில் இரட்டை வேடம் WHO இனி நிதி கிடையாது – டிரம்ப் ஆவேசம்
கொரானா வைரஸ் அடுத்த 30 நாட்களுக்குள் கட்டுக்குள் வராமல் போனால் உலக சுகாதார அமைப்புக்கு அமெரிக்கா வழங்கி வரும் நிதி நிரந்தரமாக நிறுத்தப்படும் என டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்
சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரானா வைரஸ் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் என்ற தகவல் மற்றும் வைரஸ் தொடர்பான விவரங்களை சீன அரசு மறைத்து விட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து குற்றச்சாட்டி வருகிறார்.
மேலும், இந்த வைரசின் தீவிர தன்மை குறித்து பிற நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்காமல் சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்ததாக உலக சுகாதார அமைப்பு மீதும் டொனால்டு டிரம்ப் கடுமையாக விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
அந்த அமைப்பின் தாமதமான செயல்கள் உலக நாடுகளுக்கு பல்வேறு பின்விளைவுகளை ஏற்படுத்திவிட்டதாகவும் கூறினார்.
இதற்கிடையில், கொரானா விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பின் தவறான மதிப்பீடு மற்றும் வைரஸ் குறித்த தகவல்களை உலக நாடுகளுக்கு தெரிவிக்காமல் மூடி மறைத்தது தொடர்பாக விரிவான விசாரணை செய்ய கடந்த மாதம் அதிபர் டிரம்ப் தனது நிர்வாகத்திற்கு உத்தரவிட்டிருந்தார்
அந்த மதிப்பீட்டு விசாரணை முடியும் வரை உலக சுகாதார அமைப்புக்கு அமெரிக்கா வழங்கும் நிதி அனைத்தும் நிறுத்தி வைக்கப்படுவதாக அவர் தெரிவித்திருந்தார்.
உலக அளவில் உலக சுகாதார அமைப்புக்கு அதிக நிதி அளிப்பது அமெரிக்கா என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் தலைவருக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில் கொரோனா வைரஸ் தொடர்பாக உலக சுகாதார அமைப்பு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளில் அடுத்த 30 நாட்களில் பெரும் அளவில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும்.
அவ்வாறு முன்னேற்றம் ஏற்படவில்லை என்றால் இந்த அமைப்புக்கு அமெரிக்கா வழங்கி வரும் நிதி நிரந்தரமாக நிறுத்தப்படும் என்று பகீரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க அதிபர் அனுப்பியுள்ள கடிதம் தங்களுக்கு கிடைத்துள்ளதாகவும், இந்த விவகாரம் குறித்து உரிய நேரத்தில் முடிவுகள் எடுக்கப்படும் எனவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.