
கொரானா சிகிச்சைக்கு அண்ணா பல்கலைக்கழக மாணவர் விடுதியை ஒப்படைக்க மாநகராட்சி உத்தரவு – அதிர்ச்சியில் மாணவர்கள்
கொரானா சிகிச்சை அளிப்பதற்காக அண்ணா பல்கலைக்கழக விடுதியை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் ஒப்படைக்குமாறு மாநகராட்சி சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
ஆனால் பல்கலைக் கழக விடுதியில் மாணவர்களின் உடைமைகள் இருப்பதால் இப்போதைக்கு ஒப்படைக்க முடியாது என்று துணைவேந்தர் கூறியதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் கூறியதாவது:
தேசிய பேரிடர் காலத்தில், அரசு கட்டடங்கள் மருத்துவ முகாமிற்காக பள்ளி, கல்லூரி, பல்கலைக் கழக கட்டிடங்களை குறிப்பிட்ட கால கட்டத்திற்குள் ஒப்படைக்க வேண்டும் என்று மாநகராட்சி மூலம் கடிதம் எழுதி உள்ளோம். ஆகவே அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் விடுதி கட்டிடத்தை மாநகராட்சியிடம் ஒப்படைக்க வேண்டும் என்றார்.
மாநகராட்சி கமிஷ்னரின் இந்த அறிவிப்பு அந்த விடுதிகளில் தங்கி படித்து வந்த மாணவர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதோடு, கொரானாவின் தீவிரத்தை கட்டுப்படுத்த சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கு இந்த மாதம் 30ம் தேதியுடன் முடியுமா இன்னும் நீளுமா என்ற சந்தேகத்தை சென்னை கமிஷனரின் அறிவிப்பு ஏற்படுத்தி உள்ளது.
