
பாலியல் வழக்கை மறைக்க 35 லட்சம் லஞ்சம் பேசி 20 லட்சம் வாங்கிய பெண் SI கைது!
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் விவசாய நிறுவனம் நடத்தி வருபவர் கேனல் ஷா. இதில் வேலை பார்த்த 2 பெண்களை கேனல் ஷா பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட 2 பெண்களும் மேற்கு அகமதாபாத் பகுதியில் உள்ள மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அனால் அந்த மகளிர் காவல் நிலையத்தில் எஸ்.ஐ.ஆக இருந்தவர் சுவேதா ஜடேஜா.

இந்த புகாரில் பாதிக்கப்பட்ட பெண்கள் பணிபுரிந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான கேனல் ஷாவை கைது செய்யாமல், புகாரில் சொல்லப்பட்ட பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் எந்த வழக்கும் பதிவு செய்யாமல் சாதாரண வழக்காக பதிவு செய்துள்ளார் சுவேதா.
இதற்காக ஷாவிடம் 35 லட்சம் லஞ்சம் பேசி அதில் முதற்கட்டமாக கேனல் ஷாவின் சகோதரரின் மூலம் ரூ.20 லட்சம் லஞ்சமாக பெற்றுள்ளார். மீதம் உள்ள ரூ.15 லட்சம் லஞ்சம் தர வேண்டும் என தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார்.
இந்த விவகாரம் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தகவல் தெரியவர, மீதி தொகையை தருவதாக கூறி எஸ்.ஐ. சுவேதாவை வர வைத்து லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் கைது செய்தனர். அத்துடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சுவேதாவை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் அவர் விசாரித்த பாலியல் வன்கொடுமை வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது குஜராத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
