சனிக்கிழமை, ஏப்ரல் 20
Shadow

இடப் பிரச்சினை…. அத்துமீறியது பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகமா? அடம் பிடிக்கும் இளையராஜாவா?

 

 

இடப் பிரச்சினை…. அத்துமீறியது பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகமா?
அடம் பிடிக்கும் இளையராஜாவா?

பிரசாத் ஸ்டூடியோ உரிமையாளர் சாய் பிரசாத் மீது சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் இசையமைப்பாளர் இளையராஜா புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இசையமைப்பாளர் இளையராஜா கடந்த 45 ஆண்டுகளாக சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவுக்கு சொந்தமான இடத்தில் தனது இசைக்கூடத்தை வைத்து இசையமைத்து வருகிறார். பல நூறு ஹிட் பாடல்கள் இங்கிருந்து தான் பதிவு செய்யப்பட்டது.

ஆரம்பத்தில் எல்.வி.பிரசாத் இருந்த போது இந்த இடத்திற்கு எந்த சிக்கலும் வரவில்லை. அவருக்கு பின் அவர் மகன்கள், அதன் பின் பேரன்கள் நிர்வாகத்தை கையில் எடுத்ததும் ஸ்டுடியோவில் பல மாற்றங்கள் செய்தனர்.

ஸ்டுடியோவில் இருந்து நீண்டகாலமாக வாடகைக்கு இருக்கும் இளையராஜாவை காலி செய்யும்படி நிர்வாகம் சார்பில் அழுத்தம் தரப்பட்டது. ஆனால் இடத்தை காலி செய்ய இளையராஜா மறுத்துவிட்டார்.

இதன் காரணமாக கடந்த நவம்பர் மாதம் பிரசாத் ஸ்டூடியோ உரிமையாளர் சாய் பிரசாத்துக்கும், இளையராஜாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதனால் பிரசாத் ஸ்டூடியோ உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் தன்னை இடத்தைக் காலி செய்யச் சொல்லி தொல்லை செய்வதாக ஏற்கனவே இசையமைப்பாளர் இளையராஜா வழக்குத் தொடுத்திருந்தார். அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் பிரசாத் ஸ்டூடியோவில் தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறையில் இருந்த இசைக் குறிப்புகள், மற்றும் விலைமதிப்புமிக்க பொருட்களைச் சேதப்படுத்தியதாக பிரசாத் ஸ்டூடியோ உரிமையாளர் மீது தற்போது புகார் தெரிவித்துள்ளார் இளையராஜா

இது தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கும் போதே சட்டத்தை மீறி ஸ்டூடியோ உரிமையாளர் செயல்பட்டிருப்பதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர் அளித்த அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்தவர் இடத்தில் பல ஆண்டுகள் வாடகைக்கு குடியிருக்கும் இளையராஜா சிக்கல் ஏற்பட்டதும் காலி செய்திருந்தால் தேவையற்ற சர்ச்சைகள் ஏற்பட்டிருக்காது. ஆனால் வாடகை இடத்தில் குடியிருந்து கொண்டே இடத்தை காலி செய்யாமல் அடம் பிடித்துக்கொண்டு இடத்தின் உரிமையாளர் மீது வழக்கும் போட்டு இப்போது வேண்டும் என்றே தேவை இல்லாமல் இளையராஜா தவறான குற்றச்சாட்டு வைக்கிறார் என்கிறது பிரசாத் நிர்வாகம்.

இளையராஜா புகாரை சட்டப்படி சந்திப்போம் என்றும் கூறுகிறார்கள்.

இசைஞானி இளையராஜா இந்த வாடகை இடப் பிரச்சினையில் அடம் பிடிக்காமல் அங்கிருந்து காலி செய்து வேறிடம் செல்வதுதான் அவர் புகழுக்கும் மரியாதைக்கும் நல்ல பெயரை தேடித்தரும்.

408 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன