
தேசிய கொடியை எஸ்விசேகர் அவமதித்ததாக புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
அதிமுக அரசுக்கும் காமெடி நடிகர் எஸ்.வி.சேகருக்கும் ஏற்கனவே விமர்சன மோதல் இருந்து வரும் நிலையில் எஸ்.வி.சேகர் இந்திய தேசிய கொடியை அவமதித்தார் என புகார் வந்தால் அரசு சும்மா இருக்குமா?
சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜரத்தினம் தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக வேலை செய்கிறார்.
இவர் தேசிய கொடியை நடிகர் எஸ்.வி.சேகர் அவமதிப்பு செய்ததாக ஒரு புகார் கூறி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு ஆன்லைன் மூலம் மனு ஒன்றை நேற்று அனுப்பி வைத்துள்ளார்.
அந்த மனுவில், நடிகர் எஸ்.வி.சேகர் தான் நடத்தும் யூடியூப் சேனல் ஒன்றில் இந்திய தேசிய கொடியை அவமதித்து வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் என்றும், அவர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சமீபத்தில் தான் அதிமுகவையும் அரசையும் எஸ்.வி.சேகர் கடுமையாக விமர்சித்து இருந்தார். அதோடு, அதிமுக கொடியில் உள்ள அண்ணாவை எடுத்து விட்டு ஜெயலலிதா படத்தை வைத்து அம்மா திமுகவாக மாறுங்கள் என்பது உட்பட பல விஷயங்களை சொல்லி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தார்.
இந்த நிலையில் தான் இந்த தேசிய கொடி அவமதிப்பு புகார் எழும்பி உள்ளது. இந்த வழக்கில் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கூட இந்த காமெடி நடிகர் கைதாகலாம் என கூறப்படுகிறது.
