
கொரானா பரவலால் கோட்டையில் முதல்வர் தேசிய கொடி ஏற்றும் நிகழ்ச்சியில் கடும் கட்டுப்பாடுகள்!
இந்தியாவின் 74-வது சுதந்திர திருநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தலைமைச் செயலகத்தில் உள்ள கோட்டை கொத்தளத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 15-ந்தேதி காலை 8.45 மணிக்கு தேசியக் கொடியை ஏற்றி சிறப்பிப்பார்.
ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின நிகழ்ச்சியில் சுதந்திரபோராட்ட தியாகிகளும், பொதுமக்களும், மாணவர்களும், பள்ளிக்குழந்தைகளும் பங்கேற்பார்கள். இந்த ஆண்டு கொரானா தொற்றால் நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு பள்ளிக்குழந்தைகள், கல்லூரி மாணவர் கள் மற்றும் மூத்த குடிமக்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறது.
சென்னை கோட்டை கொத்தளத்தில் நடைபெறும் சுதந்திர தின நிகழ்ச்சியில், கொரானா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட முன் களப்பணியாளர்களை சிறப்பிக்கும் விதமாக, அவர்களுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி சிறப்பிக்க உள்ளார்.
சுதந்திர தின நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி மற்றும் வானொலியில் நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கொரானா நோய் தொற்றை தவிர்க்கும் விதமாக இந்தாண்டு, பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் பள்ளிக் குழந்தைகள் விழாவைக் காண நேரில் வரவேண்டாம்.
சுதந்திர தின நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி அல்லது வானொலியில் கண்டும், கேட்டும் மகிழுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
