
வேளாண் சட்ட விவகாரத்தில் மத்திய அரசு அளித்த அனைத்து பரிந்துரைகளையும் நிராகரிப்பதாக விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி பஞ்சாப், ஹரியான உள்ளிட்ட மாநில விவசாயிகள், டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசுடனான தொடர் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை தொடர்ந்து, இந்தப் போராட்டம் 20 நாட்களை கடந்துள்ளது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் அமைப்பினர், அரசியல் கட்சியினரும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றன.
நேற்று முன்தினம் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் என அடுத்தடுத்து விவசாயிகள் தங்களின் போராட்டத்தை தீவிரப்படுத்தி வரும் நிலையில், அடுத்த கட்ட போராட்டங்களை நோக்கி விவசாயிகள் நகர்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில், டெல்லி-நொய்டா சாலையில் அமைந்துள்ள சில்லா எல்லையில் இன்று மறியலில் ஈடுபடப்போவதாக விவசாயிகள் அறிவித்தனர். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த விவசாய சங்க பிரதிநிதிகள் :- வேளாண் சட்டம் தொடர்பாக மத்திய அரசு வேறு அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை நிறுத்த வேண்டும். இந்த சட்டங்களில் மேற்கொள்வதாக மத்திய அரசு அளித்த பரிந்துரைகளையும் நிராகரித்துள்ளது. 3 சட்டங்களைத் திரும்ப பெறும் வரை போராட்டம் தொடரும், என்று தெரிவித்தனர்.

