வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19
Shadow

ஆணுக்கு பெண் சமம் ‘கேங்மேன்’ வேலை பார்க்கும் இளம்பெண்!

ஆணுக்கு பெண் சமம் ‘கேங்மேன்’ வேலை பார்க்கும் இளம்பெண்!

ஆணுக்கு பெண் சமம் என்று கூறி வந்தாலும், ஏட்டில் எழுதி வந்தாலும் சில வேலைகள் ஆண்கள் மட்டுமே செய்ய முடியும் என்ற நிலை காலம் காலமாக நிலவி வருகிறது. ஆனால் அதை தற்போதைய இளம்பெண்கள் முறியடித்து வருகிறார்கள். அதற்கு உதாரணமாக ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியில் ஒரு பெண் திகழ்கிறார்.

கவுந்தப்பாடி அருகே உள்ள சேவாக் கவுண்டனூரை சேர்ந்தவர் ராசா. இவருடைய மகள் ராஜேஸ்வரி (வயது 29). இவருக்கும், அந்தியூர் புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவருக்கும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது இவர்களுக்கு 6 மாத கைக்குழந்தை உள்ளது.

சமீபத்தில் மின்வாரியத்தில் கேங்மேன் வேலைக்கு ஆட்கள் தேர்வு நடந்தது. இதையறிந்த திருநாவுக்கரசு அந்த வேலைக்கு விண்ணப்பித்தார். மேலும் மனைவி ராஜேஸ்வரியையும் விண்ணப்பிக்க சொன்னார். இதைத்தொடர்ந்து விண்ணப்பித்த இருவரும் அதற்கான பயிற்சியும் எடுத்துக்கொண்டார்கள்.

இந்தநிலையில் திருநாவுக்கரசுக்கும், ராஜேஸ்வரிக்கும் கவுந்தப்பாடியிலேயே கேங்மேன் வேலை கிடைத்தது.

வேலைக்கு சென்ற ராஜேஸ்வரி, மின்கம்பத்தில் வீட்டு இணைப்புகள் துண்டிக்கப்பட்ட தகவல் கிடைத்தால் சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்று, மின்கம்பத்தில் ‘விறுவிறு’ என ஏறி மின் இணைப்பை சரி செய்கிறார். இதேபோல் மின்மாற்றியில் ஏறியும் வேலை பார்க்கிறார்.

இந்த காட்சிகளை காணும் பொதுமக்கள் வியந்துபோய் அண்ணாந்து பார்க்கிறார்கள். ‘அட பொண்ணு என்னமா கம்பத்துல ஏறி பீஸ்போடுது’ என்று பாராட்டுகிறார்கள்.

இதுகுறித்து ராஜேஸ்வரியிடம் கேட்டபோது, நான் விவசாய குடும்பத்தில் பிறந்தவள். ஏற்கனவே தென்னை மரங்களில் ஏறி தேங்காய் பறித்து போடுவேன்.

இதையறிந்த என் கணவர் தான் கேங்மேன் வேலைக்கு விண்ணப்பிக்க ஊக்கம் கொடுத்தார். அதன் காரணமாகவே நான் பயமின்றி வேலை செய்கிறேன். கவுந்தப்பாடி நகர்ப்புறத்தில் பீஸ் போனால் தகவல் தருவார்கள். நான் அங்கு சென்று சரி செய்வேன். இதேபோல் நான் பணி செய்யும் இடத்திலும், என் குடும்பத்திலும் அனைவரும் ஒத்துழைப்பு தருகிறார்கள் அதுவும் காரணம். முயற்சி இருந்தால் போதும். பெண்கள் எந்த வேலையும் செய்யலாம்.

 

235 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன