
ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத்தேர்தலையொட்டி சென்னை மாவட்டத்தற்குட்பட்ட ஆர்.கே.நகர் சட்ட மன்ற தொகுதிக்கு வருகின்ற டிசம்பர்-21 அன்று இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான சட்டம் ஒழுங்கு பார்வையாளரை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.
தேர்தல் தொடர்பான நிகழ்ச்சிகளின் அட்டவணை பின்வருமாறு
வேட்பு மனுதாக்கல் துவக்க நாள்- 27.11.2017 (திங்கட்கிழமை)
மனுதாக்கல் செய்வதற்கான கடைசி நாள்- 04.12.2017 (திங்கட்கிழமை)
வேட்பு மனு பரிசீலனை- 05.12.2017 (செவ்வாய்கிழமை)
வேட்புமனுவினை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள்- 07.12.2017 (வியாழக்கிழமை)
தேர்தல் நாள்- 21.12.2017 (வியாழக்கிழமை)
ஓட்டு எண்ணிக்கை நாள்- 24.12.2017(ஞாயிற்றுக்கிழமை)
தேர்தல் நடவடிக்கைகள் இந்த நாளுக்கு முன்பாக முடிவுறும் நாள் 26.12.2017(செவ்வாய்கிழமை)
இந்த தேர்தலை முன்னிட்டு காவல்துறை சட்ட ஒழுங்கு பார்வையாளராக இம்மானுவேல் கே முய்வா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று சென்னை வந்துள்ளார். அவருடைய கைபேசி எண்: 9445071061.
ஆர்.கே.நகர் சட்ட மன்ற தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலர் கே. வேலுச்சாமி இணை இயக்குநர், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர், கைபேசி எண்: 9498014100. உதவி தேர்தல் நடத்தும் அலுவலராக எஸ். முருகேசன், வட்டாட்சியர் தண்டையார்பேட்டை வட்டம் கைபேசி எண்: 9445000484 மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலராக ஆர். சுப்பிரமணியன் தனி வட்டாட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் தண்டையார்பேட்டை வட்டம் அவருடைய கைபேசி எண்: 9842029246.
இது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் கார்த்திகேயேன் விடுத்துள்ள அறிவிப்பு:
“நாளை முதல் வேட்பு மனு தாக்கல் துவங்கவுள்ளது. வேட்பு மனுக்களை வேட்பாளர்கள் பெருநகர சென்னை மாநகராட்சி தண்டையார்பேட்டை மண்டல அலுவலகத்தில் உள்ள ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடமோ அல்லது உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடமோ காலை 11.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை அளிக்கலாம்.
வருகின்ற டிசம்பர்.02 (சனிக்கிழமை) மற்றும் டிசம்பர். 03 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தினங்களில் விடுமுறை நாளானதால் வேட்புமனுக்கள் பெறப்படமாட்டாது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் 04.12.2017. வேட்புமனுக்கள் 05.12.2017 அன்று பரிசீலனை செய்யப்படும்.
வேட்பு மனுக்கள் வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள் டிசம்பர்.07 வேட்புமனு தாக்கலின் போது வேட்பாளரைச் சேர்த்து 5 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்கள். மேலும் வேட்பாளருடன் வரும் வாகனங்கள் எணிக்கை 3 மட்டும் 100 மீட்டர் உட்பட்ட பகுதியில் அனுமதிக்கப்படும்” இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலர் கார்த்திகேயன், தெரிவித்துள்ளார்.
