வெள்ளிக்கிழமை, மார்ச் 29
Shadow

1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க முடிவு: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்!

1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க முடிவு: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்!

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஓராண்டாகவே பள்ளி, கல்லூரிகள் இயங்கவில்லை. ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டன.

இடையில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டாலும் மீண்டும் கொரோனா தொற்று பரவியதால் மூடப்பட்டது.

2-வது அலை கொரோனா தாக்கத்துக்கு பிறகு படிப்படியாக தொற்று குறையத் தொடங்கி உள்ளது. பல மாவட்டங்களில் தொற்று மிகவும் குறைந்துள்ளது. இதையடுத்து பள்ளி, கல்லூரிகளை திறப்பது என்று தமிழக அரசு முடிவு எடுத்தது.

அதன்படி கடந்த 1-ந் தேதி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புவரை வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. கல்லூரிகளும் திறக்கப்பட்டுள்ளன.

வகுப்புகள் நடந்து வரும் அனைத்து பகுதிகளிலும் இதுவரை எந்த பிரச்சனையும் வரவில்லை. நோய் தொற்றும் தொடர்ந்து குறைந்து கொண்டே இருக்கிறது.

எனவே கீழ் வகுப்புகளையும் இயக்கலாமா என்று தமிழக அரசு ஆலோசித்து வருவதாக தமிழக கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறி இருக்கிறார்.

திருச்சியில் ஆசிரியர் தினவிழாவில் பங்கேற்ற அவர், இது சம்பந்தமாக நிருபர்களிடம் கூறியதாவது:-

9 முதல் 12 வகுப்பு வரை வகுப்புகள் தொடங்கி நடை பெற்று வருகிறது. முதல் 8 நாட்கள் வகுப்புகள் எப்படி செல்கிறது, வருகை பதிவேடு எப்படி இருக்கிறது, மாணவர்களின் பாதுகாப்பு போன்றவை குறித்து கண்காணிக்க திட்டமிட்டு அதை கண்காணித்து வருகிறோம்.
தொடக்க பள்ளி என்பது மிகவும் முக்கியமானது. கொரோனா கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த சூழலில் அவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து என்ன முடிவெடுக்கலாம் என்பதை 8-ம் தேதிக்கு பின்பு கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும்.

மாணவர்களுக்கு பரவலாக ஏதாவது ஒரு பள்ளியை தேர்ந்தெடுத்து கொரோனா பரிசோதனை செய்ய கூறினோம். அப்படி செய்ததில் நாமக்கல் மாவட்டத்தில் 3 மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர்கள் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இது போன்று என்ன என்ன பிரச்சனைகள் எட்டு நாட்களில் வருகிறது என்பதையும் கண்காணித்து வருகிறோம். நிச்சயம் மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.

ஆசிரியர்கள் தொடர்பாக 11 வகையான பிரச்சனைகள் இருக்கிறது. அது தொடர்பாக பல கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. பள்ளிக்கல்வித்துறையில் மட்டும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளன. ஆசிரியர்கள் பிரச்சனைகள் குறித்து முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று அவர்களின் பிரச்சனைகளை ஒவ்வொன்றாக தீர்க்க வழிவகை செய்யப்படும்.

தூய்மை பணியாளர்கள் இல்லாத பள்ளிகளில் தூய்மை பணியாளர்களை விரைவில் பணி அமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

பள்ளிகள் காலை 9.30 முதல் மாலை 3.30 வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டது. மாணவர்களின் கூடுதல் திறன் மேம்பாட்டிற்காக சில பள்ளிகள் கூடுதல் நேரம் எடுத்து கொண்டு பள்ளிகளை இயக்குகின்றனர். அவ்வாறு செய்வதில் தவறில்லை.மொத்தமாக 8 மணி நேரம் பள்ளிகள் இயங்குகிறது. மாணவர்கள் தாமதமாக வந்தால் அவர்களுக்கு தண்டனை வழங்கக்கூடாது. பள்ளிகளுக்கு வராமல் இருந்த மாணவர்கள் முதலில் பள்ளிகளுக்கு வர விடுங்கள் என கூறியுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.
157 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன