காலையில் மதுரை மாலையில் திருச்சி திடீரென சிறை மாற்றப்பட்ட ராஜேந்திரபாலாஜி! காரணம் என்ன?
நிர்வாக காரணங்களுக்காக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மதுரை சிறையிலிருந்து திருச்சி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.
அதிமுக ஆட்சியில் பால் வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி.
இவர் ஆவின் நிறுவனத்தில் பணி வாங்கி தருவதாக கூறி சுமார் 3 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு அவரை கைது செய்விருந்த நிலையில் தலைமறைவானார்.
8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் பல்வேறு இடங்களில் அவரை கைது செய்வதற்காக தனிப்படை காவல்துறையினர் தேடி வந்தனர்.
இந்நிலையில் கர்நாடக மாநிலம், ஹசன் மாவட்டத்தில் நேற்று காலை காரில் சென்று கொண்டிருந்த ராஜேந்திர பாலாஜியை தமிழக தனிப்படை காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர் கைது செய்ய்யப்படும் போதுஏதோ கடத்தல்காரனை போலீசார் சுற்றி வளைத்து விட்டதாக அந்த பகுதி மக்கள் கூட்டமாக கூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து அவர் அங்கிருந்து நேற்று இரவு விருதுநகருக்கு அழைத்து செல்லப்பட்டு அங்கு அவரிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
இதனையடுத்து இன்று காலை விருதுநகர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் திடீரென மதுரை சிறையில் இருந்து திருச்சி சிறைக்கு ராஜேந்திர பாலாஜி மாற்றப்பட்டார். இந்த சிறை மாற்றம் குறித்து சிறைத்துறை வட்டாரங்களில் விசாரித்த போது, மதுரை சிறையில் சட்டம், ஒழுங்கு, பாதுகாப்பு மற்றும் நிர்வாக காரணங்களுக்காக ராஜேந்திர பாலாஜியை திருச்சி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டதாக கூறப்பட்டது.