செவ்வாய்க்கிழமை, ஜூன் 16
Shadow

“காணும் பொங்கல்” கடற்கரை, பூங்காக்களில் பொதுமக்களுக்கு தடை! 10 ஆயிரம் போலீசார் கண்காணிப்பு!!

காணும் பொங்கல்” கடற்கரை, பூங்காக்களில் பொதுமக்களுக்கு தடை! 10 ஆயிரம் போலீசார் கண்காணிப்பு!!

தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு அமலில் உள்ளது. எனவே, காணும் பொங்கலை முன்னிட்டு பொதுமக்கள் வெளியே கூடாமல் கண்காணிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஜனவரி 31ம் தேதிவரை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, இன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு 25 ஆயிரத்தை நெருங்கியுள்ளதால் கட்டுப்பாடுகளை தீவிரமாக நடைமுறைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

பொங்கல் பண்டிகையின் மூன்றாம் நாளான இன்று காணும் பொங்கலாக கொண்டாடப்பட்டு வருகின்றது. காணும் பொங்கல் முன்னிட்டு குடும்பத்துடன் கடற்கரை, சுற்றுலா தளங்கள், கோவில் பூங்காக்கள், திரையரங்கங்கள் உள்ளிட்டங்கள் இடங்களுக்கு  சென்று உற்சாகமாக பொழுதை கழிப்பது வழக்கமாகும். சிலர் உறவினர்கள் இல்லங்களுக்கு செல்வதுண்டு.

இன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலில் உள்ளதால், பொதுமக்கள் வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.  பேருந்துகள், மெட்ரோ ரயில்கள் இயங்காது. கேளிக்கை சார்ந்த அனைத்து செயல்பாடுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மதுபானக் கடைகள், மொபைல் கடைகள் உள்ளிட்ட அத்தியாவசியமற்ற கடைகள் அனைத்துக்கும்  தடை விதிக்கப்பட்டுள்ளது.

வழிபாட்டுத்தலங்களுக்கு அனுமதியில்லை. கொரோனா பரவல் காரணமாக வண்டலூர் உயிரியல் பூங்காவும் ஜனவரி 31ம் தேதி வரை மூடப்பட்டுள்ளது

தடையை மீறி அவசியம் இன்று பொதுமக்கள் வெளியே வந்தால் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

மெரினா கடற்கரை, பெசண்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் தடையை மீறி குவியாமல் இருப்பதை கண்காணிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையில் சுமார் 10 ஆயிரம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

601 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன