உலக புகழ்பெற்ற அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு
உலக புகழ்பெற்ற அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 7.00 மணிக்கு தொடங்கியது.
வாடிவாசலில் இருந்து வெளியே சீறி பாயும் காளைகளை அடக்க காளையர்கள் வீரத்துடன் முயன்று வருகின்றனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது தமிழர்களின் பண்பாடு ஆகும்.
அதன்படி, அவனியாபுரம், பாலமேடு ஆகிய பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று முடிந்தது.
அலங்காநல்லூரில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற இருந்த் நிலையில், ஊரடங்கு காரணமாக இன்று ஒத்தி வைக்கப்பட்டது.
அதன்படி இன்று காலை 7.00 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. இதில் 700காளைகளுடன் , 300மாடுபிடி வீரர்கள் பங்கேற்கின்றனர்.
கொரோனா பரிசோதனை செய்து நெகடிவ் சான்றிதழ் வைத்துள்ள காளை உரிமையாளர்கள், மாடுபிடி வீரர்கள் மட்டுமே போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். போட்டியில் ஒரு சுற்றுக்கு 30 மாடுபிடி வீரர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் .
போட்டியை காண்பதற்காக 150பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கபட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு போட்டியையொட்டி 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். மருத்துவ உதவிக்காக 108ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சிறந்த காளை மற்றும் சிறந்த மாடு பிடி வீரருக்கு கார் பரிசாக வழங்கப்பட இருக்கிறது. அதேபோன்று ஜல்லிக்கட்டில் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்படும் அனைத்து காளைகளுக்கும் தலா ஒரு தங்ககாசு வழங்கப்படும் என்று வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி அறிவித்துள்ளார். அதேபோல், மாடுகளை பிடிக்கும் வீரர்களுக்கும் தங்க காசு வழங்கப்படவுள்ளது.

