திங்கட்கிழமை, ஜூன் 15
Shadow

மக்களை மறந்த நிதிநிலை அறிக்கை – முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்

 

2022-2023-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் மின்னணு முறையில் தாக்கல் செய்தார்.

இதைத் தொடர்ந்து இந்த பட்ஜெட் சாமான்ய மக்களுக்கு எந்த வகையிலும் பலனளிக்காத பட்ஜெட் என எதிர்க்கட்சியினர் விமர்சித்துவருகின்றனர்.

இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  இந்த பட்ஜெட் தாக்கல் தொடர்பாக அறிக்கை ஒன்று வெளியிட்டிருக்கிறார்.

அந்த அறிக்கையில், “அலங்கார வார்த்தைகள் நிறைந்த, பா.ஜ.க அரசின் வழக்கமான பட்ஜெட் இது. தனிநபர் வருமானவரி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை. வேளாண் சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் உயிரிழந்த உழவர்களுக்கான எந்தத் திட்டமும் இல்லை.

மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு முன்வைத்த திட்டங்களுக்கான நிதியுதவி இல்லை. இயற்கைப் பேரிடர்களுக்கு கோரிய நிவாரண நிதி இல்லை.

இந்த நிதி நிலை அறிக்கை தமிழ்நாட்டு மக்களுக்கு பெரும் ஏமாற்றம். கோதாவரி – பெண்ணாறு திட்டத்துக்கான முதற்கட்ட நிதி ஒதுக்கீட்டைக்கூட இந்த அறிவிப்பில் குறிப்பிடவில்லை. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கான நிதியை 25 ஆயிரம் கோடியாகக் குறைத்திருப்பது, அடித்தட்டு மக்களிடம் ஒரு பைசாகூட இருக்கக் கூடாது என்ற எண்ணத்தின் வெளிப்பாடு.

மாநிலங்களுக்கு ரூ.1 லட்சம் கோடி வட்டியில்லாக் கடன் என அறிவித்திருந்தாலும், அது மத்திய அரசின் திட்டங்ளுக்குத்தான் என்பதை நிபந்தனைகள் மூலம் அறிய முடிகிறது. `One Nation One Registration’ என்ற திட்டத்தின் மூலம்,

மாநில அரசின் உரிமைகளைப் பறிப்பது அப்பட்டமாக வெளிப்படுகிறது. மொத்தத்தில் மக்களை மறந்த நிதிநிலை அறிக்கை என அடைமொழியிட்டு அழைப்பதே பொருத்தம்” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

351 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன